வில்லை ஏந்திய மேகம் போன்றவனான இராமபிரான்மீது; பூமழை பொழிந்து - மலர்மாரி பெய்து; வாழ்த்தி விண்ணவர் போயினார்- அவனை வாழ்த்தித் தேவர்கள் சென்றனர். ‘யாமும்’ என்பதிலுள்ள ‘உம்மை’ எதிரது தழீஇய எச்ச உம்மை. யாம்: தேவர்களாகிய யாம். இருக்கை: இருப்பிடம் (உறையுள்). பெற்றேம் என்பது தன்மைப்பன்மை வினைமுற்று. இடையூறு. தீங்கு. கோமகன்: அரசகுமாரன். கொடுத்தி: முன்னிலை ஏவல் வினைமுற்று ‘விற்கொண்ட மழை’ இல்பொருள் உவமையாம். பூமழை: மலர்மாரி. நாங்களும் எங்கள் இடங்களைத் திரும்பப் பெற்றோம். என்றது. அரக்கர்கள் அத் தேவர்களை விரட்டி. அவர்களது இடங்களைத் தமக்கு உரிமையாக்கிக் கொண்டனர். அரக்கர்கள் இனி அழிதல் திண்ணம் என்பதால் ‘யாமும் எம் இருக்கை பெற்றோம்’’ என்றர். கால வழுவமைதி. 55 |