தம்பன்முதலானவர்கள் இராமபிரான் கை அம்பு போல உதவும் படைத் தலைவர்கள். இந்த அரக்கர்கள் அந்த படை வீரர்களுக்கு உறையாக வைப்பதற்கும் போதமாட்டார்கள். உருக்காட்டுப்படலம் மிகைப்பாடல்கள் 117-1 என்ற எண்ணுள்ள பாடல் இங்கு அடுத்து இருப்பின் பொருள் தொடர்பு - அடுத்த படலத் தொடர்பு இரண்டுக்கும் பொருந்தும். அப்பாடலின் திரண்ட கருத்து:- சிரஞ்சீவியாகிய அனுமன் மேலும் கூறுவான் இராமன் பால் சென்று வணங்கி உனது துன்பத்தைச் சிறிதளவு உணர்த்தும் வரைதான் அரக்கர் கூட்டம் உளதாகும். உணர்த்த உணர்ந்த அளவிலேயே இவ்வரக்கர் கூட்டமும் இலங்கைமாநகரும் குரங்கின் கைப் பூமாலையாகப் பிய்த்து எறியப் பட்டுவிடும் என்று சொல்லி வணங்கினான். பின்னரும் ஒரு வார்த்தை சொல்வதற்கு மனத்தில் சிந்தித்தான். (117) |