கிளமயி லனைய தேவிக்
கிரங்கிய சதானி கன்றான்
உளமலி கொள்கை யான்ற
வொருதவற் கண்டு ரைத்தான்.
(இ - ள்.) மாமனுடன் சென்று கோமுடி கொண்ட
உதயண வேந்தன் இளமைப் பருவங்கடந்து கட்டிளங்காளைப்
பருவமடைந்து அந்நாட்டினை வள்ளன்மைப்பண்போடு செங்கோல்
செலுத்தினானாக; இனி
வத்தவ நாட்டின்கண் கௌசாம்பியில் சதானிகன் தன்
கோப்பெருந்தேவியாகிய இளமயில் போலுஞ் சாயலையுடைய
மிருகாபதியின் பிரிவிற்குப் பெரிதும் வருந்தியவனாய்
முக்கால நிகழ்ச்சிகளையும் அறிந்து கூறும் நெஞ்சு நிறைந்த
கோட்பாடு மிக்கானொரு துறவியின்பாற் சென்று தன்
வருத்தத்தைக் கூறினான் என்க. (20)
மிருகாபதி மீண்டும் மக்களைப் பெறுதல்
25. தேவியின் வரவு நல்ல திருமகன் செலவுங்
கேட்டு
மாவலன் மனம கிழ்ந்து வந்தூர்புக்
கிருக்கு நாளில்
தேவியும் வந்து கூடிச் சிறந்தநற்
புதல்வர் தம்மைத்
தேவிளங் குமரர் போலச் செவ்வியிற்
பயந்தா ளன்றே.
(இ - ள்.) அந்தத் துறவி தனது ஓதி ஞானத்தாலுணர்ந்து
கூறுதலாலே யானைப் போர், குதிரைப் போர் வல்லவனான
அந்தச் சதானிகமன்னன் மிருகாபதி சேதிநாடு வந்துற்றதும்
செல்வமிக்க உதயணனும் அவளொடு போந்தமையும் அறிந்து
உளம் மகிழ்ந்து தன்கோநகரம் புக்கு மிருகாபதியின்
வரவினை எதிர்பார்த்திருந்த காலத்திலே அம்முனிவன்
கூறியநாளிலே அம்மிருகாபதியும் சேதி நாட்டினின்றும்
வத்தவநாடு புக்குத் தன் காதலனாகிய சதானிகனோடு
கூடியிருந்து மீண்டும் அறிவு முதலியவற்றாற் சிறந்த
தேவ மக்கள் போன்ற இரண்டு ஆண்மக்களைத் தகுந்த செவ்வியி
லீன்று மகிழ்ந்தாள் என்க. (21)
26. பிங்கல கடக ரென்று பேரினி திட்டு மன்னன்
தங்கிய காத லாலே தரணியாண் டினிது செல்லக்
குங்கும மணிந்த மார்பக் குமரனும் யூகி
யும்போய்
அங்குள தேச மெல்லா மடிப்படுத் தினிதி ருந்தார்.
(இ - ள்.) இவ்வாறு மீண்டும் மக்கட்
பேறெய்திய அச் சதானிகமன்னன் அம்மக்கட்குப்
பிங்கலன் என்றும் கடகன் என்றும் பெயர்சூட்டி அம்மனைவி
மக்கள்பால் அழுந்திய காதலோடு அந்நாட்டினை இனிது
ஆட்சிபுரிந்து வாழும் நாளிலே, ஆண்டுச் சேதி
|