பக்கம் எண் :

பக்கம் : 719
 
அச்சுவகண்டன் நம்மிசைப்
போர்க்குவரக் கருதுகின்றான் எனல்
1133. விரைசெல லிவுளித் தேரோய் விஞ்சைய ருலக மாளும்
அரைசர்க டிகிரி 1வேந்த னச்சுவ கண்ட னோடும்
திரைசெல வுரறி ஞாலந் 2தின்னிய கடல்க ளேழுங்
கரைசெல வருவ போனம் மேல்வரக் கருது கின்றார்.
 

     (இ - ள்.) விரைசெலல் இவுளித்தேரோய் - விரைந்த செலவினையுடைய புரவிபூண்ட
தேரையுடைய வேந்தனே, விஞ்சையர் உலகம் ஆளும் அரைசர்கள் - விச்சாதரர்
உலகத்தை ஆளாநின்ற அரசர்கள் பலரும், திகிரி வேந்தன் அச்சுவகண்டனோடும் -
ஆழியேந்திய வேந்தனாகிய அச்சுவ கண்டனுடனே, கடல்கள் ஏழும் - ஏழு கடலும்
ஒருங்கே திரண்டு, திரைசெல வுரறி - அலைகள் விரைந்து செல்லுமாறு முழங்கி, ஞாலம்
தின்னிய - உலகத்தை விழுங்கும் பொருட்டு, கரைசெல வருவபோல் - கரையின்மேல் படர
வருவதைப் போன்று, நம்மேல்வரக் கருதுகின்றார் - நம்மீது போர் செய்ய வருதலை
எண்ணுகின்றனர், (எ - று.)

     அரசே! விச்சாதர வேந்தர் பலர், அச்சுவகண்டனோடு, ஊழிக் காலத்துக்
கடல்போன்ற படையோடே, நம்மேற் போர் ஆற்றலுக்கு வரக் கருதியுள்ளார் என்றான்,
என்க.
 

( 3 )

திவிட்டன் அரிமாவைக் கொன்றமைபற்றி
விஞ்சையருலகிற் பட்டமை வினாதல்
1134. அரைசர்கள் வருக போக வதுபண்டே 3யறிந்த தன்றே
வரைசெறி சிங்க வேறு மணிவண்ண 4னொழித்த ஞான்றே
விரைசெறி பொழில்கொள் சோலை விஞ்சைய ருலகிற் பட்ட
துரைசிறி தென்ன லோடு மொற்றனு முரைக்க லுற்றான்.
 
     (இ - ள்.) அரைசர்கள் வருக - அவ்வேந்தர்கள் நம்மேல் வருவார் எனின் வருக,
அதுபண்டே அறிந்ததன்றே - அவர் அவ்வாறு வருவர் என்பது யாம் முன்னரே அறிந்த
தொன்றே அன்றோ, போக - ஆதலால் அச்செய்தியை ஒழிக, மணிவண்ணன் - நந்
திவிட்ட நம்பி, வரைசெறி சிங்கஏறு ஒழித்த ஞான்று - மலைக்குகையின்கண் உறைந்த
ஆண்சிங்கத்தைப் பிளந்துகொன்றொழித்த பொழுது, விரைசெறி பொழில்கொள் சோலை
விஞ்சையர் உலகிற் பட்டது - மணம் நிறைந்த பெருமையுடைய சோலைசூழ்ந்த
விச்சாதரருலகத்தே நிகழ்ந்ததனை சிறிது உரை என்னலோடும் - சிறிது நீ கூறுக என்று
சடிமன்னன் உரைத்தவுடனே, ஒற்றனும் உரைக்கலுற்றான் - அவ்வொற்றனும் கூறலானான்,
(எ - று.)     

 


     (பாடம்) 1 யாளுமச்சுவ. 2பருகிய. 3யறியுமன்றே. 4னழித்த.