பக்கம் எண் :

பக்கம் : 9
 
    
நூல் வந்தவழி
6. விஞ்சைக் கிறைவன் விரைசூழ்முடி வேந்தன் மங்கை
பஞ்சிக் கனுங்குஞ் சிலம்பாரடிப் பாவை பூவார்
வஞ்சிக் கொடிபோல் பவள்காரண மாக வந்த
செஞ்சொற் புராணத் துரையின்வழிச் சேறு மன்றே.
     (இ - ள்.) விஞ்சைக்கு இறைவன் - மாலி காஞ்சன முதலிய சிறந்த வித்தைகளுக்குத்
தலைவனும், விரைசூழ் முடிவேந்தன் - நறுமணங் கமழும் மாலைசுற்றப்பட்ட
முடியணிகலன் அணிந்த மன்னனும் ஆகிய சுவலனசடி யினுடைய; மங்கை - மகளும்;
பஞ்சிக்கு அனுங்கும் சிலம்பு ஆர் அடிப் பாவை - மெல்லிய பஞ்சின்மீதிடுதற்கும் அஞ்சி
வருந்துதற்குக் காரணமான சிலம்பு பொருந்திய மெல்லிய அடியையுடையவளும் கொல்லிப்
பாவை போல்பவளும்; பூ ஆர் வஞ்சிக் கொடி போல்பவள் - மலர்கள்நிரம்பிய வஞ்சி
என்னும் பூங்கொடி போல்பவளுமாகிய சயம்பவை என்பவள்; காரணமாகவந்த -
தலைக்கீடாகத் தோன்றிய; செஞ்சொல் புராணத்து உரையின்வழி - இறைவன்
அருளிச்செய்த ‘பிரதமாநுயோகமாபுராணம்‘ என்னும்செவ்விய சொற்களாலியன்ற
புராணத்திற் கூறப்பட்ட முறைப்படியே; சேறும் - யாம் இந்நூலின்கண்ணும்
கூறிச்செல்வேம், (எ - று.)

 (5)