பக்கம் : 966 | | (இ - ள்.) தேவி தன் தாதைக்கேற்ற - தன் கோப்பெருந் தேவியாகிய சுயம்பிரபையின் தந்தையாகிய சடிமன்னனின் தகுதிக்குப் பொருந்துவனவாகிய, பெருஞ் சிறப்பு இயற்றி - பெரிய சிறப்புக்களைச் செய்துபசரித்து, செல்வன் - திவிட்ட மன்னன், வேய் விரி வெள்ளிக்குன்றின் - மூங்கில்கள் அடர்ந்த வெள்ளிமலைக் கண்ணவாகிய, விஞ்சையர் உலகம் எல்லாம் - விச்சாதரர் நாட்டை எல்லாம், ஓவு இல புகழினானுக்கு - ஒழியாத புகழையுடைய சடி வேந்தனுக்கு, உடன்கொடுத்து - ஒருங்கே ஆளும்படி வழங்கி, உரிமையோடும் - தன் மனைவி முதலிய உரிமைச் சுற்றத்தாரோடும், பூவிரி உருவத்தாரான் பின்சென்று - மலர்கள் விரிந்த அழகிய மாலையுடைய அச்சடிவேந்தனுக்குப் பின்னே தொடர்ந்து சென்று, விடுத்துப் போந்தான் - விடை கொடுத்து வழிவிட்டுப் பின் தன் போதனத்தின் கண் வந்தனன், (எ - று.) தேவியின் தாதையாகிய சடிமன்னனின் தகுதிக்கேற்ற பெருஞ் சிறப்புக்கள் பல செய்து, விச்சாதர உலகினை ஆளும் உரிமையும் அவனுக்கருளித் தன் உரிமையோடே பின்சென்று வழிவிடுத்து மீண்டும் நம்பி போதனத்தே வந்தான் என்க. | (421) | | நம்பியின் மகிழ்ச்சி | 1552. | தெவ்வரங் கின்மை யாலுந் திசையினில் வணக்கற் பால வவ்விழி யின்மை யாலு மருமணி வண்ண னாங்கு மௌவலங் குழலி யாலு மணிநில மடந்தை யாலுஞ் செவ்வலர்த் திருவி னாலுஞ் செருக்கிய களிய னானான். | (இ - ள்.) தெவ்வர் அங்கின்மையாலும் - தன்னாட்டின் கண் உட்பகையுடையார் ஒருவரும் இல்லாமையாலும், திசையினில் - எண் திக்குகளினும், வணக்கற்பால - தான் மேற்சென்று அடிப்படுக்கற் பாலவாகிய பகை ஏதும்; அவ்வழி - அத்திசைகளிடத்தேயும், இன்மையாலும் - இல்லாமையானும், அருமணிவண்ணன் - திவிட்டநம்பி, ஆங்கு - அப்போது, மௌவலங்குழலியாலும் - முல்லைமாலையணிந்த கூந்தலையுடைய சுயம்பிரபையென்னும் பெறற்கரும் பெருந்தேவியை உடைமையாலும், மணிநில மடந்தையாலும் - அழகிய நிலமடந்தையை உடைமையாலும், செவ்வலர் திருவினாலும் - அறநெறியானே செவ்விதிற் பெருகிய செல்வ மிகுதியாலும், செருக்கிய களியன் ஆனான் - செம்மாப்பெய்தி மகிழ்வானாயினன், (எ - று.) தன் ஆட்சிக்கண் அமைந்த நாட்டின்கண் கொல்குறும்பு முதலிய உட்பகை யில்லாமையானும், வேறு நாட்டினும் எல்லா அரசரும் தனக்கு இறை செலுத்துவோராய் உள்ளாரன்றிப் பகையுடையோரின்மையானும், பெறற்கரிய தேவியை உடைமையானும் வளமிக்க நாட்டையும் செவ்விதிற் பெருகிய திருவினையும் உடைமையானும் நம்பி செருக்கிய களியனானான் என்க. | (422) |
| | |
|
|