பக்கம் எண் :


 பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம் 107


 

 226. சீயமா புரத்தின் றன்மை செப்புவன் சிறிது கேண்மோ
     காயமா றாகச் செல்வோர் கண்டபின் கடந்து போகார்
     தூயவாந் தலஞ்செய் குன்றஞ் சோலைகண் மாடந் தம்மாற்
     சேயிழை மடநல் லார்போல் சித்தத்துக் கினிய தொன்றே.

     (இ-ள்.) சீயமாபுரத்தின் - அந்த ஸிம்மமஹா புரத்தினது, தன்மை
- தன்மையை,  சிறிது  -  கொஞ்சம்,  செப்புவன்  -  சொல்லுவேன்,
கேண்மோ  -  கேட்பாயாக,   காயமாறாக   -   ஆகாயமார்க்கமாக,
செல்வோர்   -   செல்பவர்களாகிய    தேவர்கள்   வித்தியாதரர்கள்
முதலியவர்கள், கண்டபின் - அந்நகரத்தைப் பார்த்த பின்பு, கடந்து -
தாண்டி,   போகார்  -  போகமாட்டாமல்  தங்குவார்கள், தூயவாம் -
பரிசுத்தமாகிய,     தலம்     -    தலங்களும்,      செய்குன்றம் -
கிரீடாத்திரிபர்வதங்களும்,   சோலைகள்   -  தோப்புகளும்,   மாடம்
தம்மால்  -  உப்பரிகைகளும் (ஆகிய) இவைகளால், (பார்க்குமிடத்தில்
அது) சேயிழை - சிவந்த ஒளியுள்ள ஆபரணங்களை யணிந்திராநின்ற,
மடம்        -       அறியாமையையுடைய,       நல்லார்போல் -
ஸ்திரீமார்களைப்போல,  சித்தத்துக்கு  -  மனதுக்கு, இனியதொன்று -
இனிமையான தோற்றத்தையுடையதாகிய ஒன்றாகும், எ-று.         (3)

 227. செப்பிய நகர்க்கு நாதன் சீயமா சேன னென்பான்
     வெப்பநின் றறாத வேலான் வேந்தரை வென்ற பெற்றிக்
     கொப்புமை யின்றி நின்றா னுதவிகற் பகத்தை யொப்பான்
     துப்புறழ் தொண்டை வாயார் தொழுதெழு காமன் கண்டாய்.

     (இ-ள்.)  செப்பிய -  சொல்லப்பட்ட,  நகர்க்கு - அந்த  ஸிம்ம
மஹாபுரத்திற்கு,  நாதன் - இராஜாவானவன், சீயமாசேன னென்பான் -
சிம்மசேனனென்பவனாகும்,   வெப்பம்நின்று   -  சத்துருக்கள்பேரில்
ஏற்படும் கோபவெதுப்பம்நின்று,   அறாத   -   நீங்காத, வேலான் -
வேலாயுதத்தையுடைய     அவ்வரசன்,    வேந்தரை   -    சத்துரு
இராஜாக்களை,      வென்ற     -     ஜெயித்த,      பெற்றிக்கு -
பெருமைத்தன்மைக்கு, ஒப்புமையின்றி - உவமையில்லாமல், நின்றான் -
நிலைபெற்றிருந்தான்,      உதவி     -     உதவி      செய்வதில்,
கற்பகத்தையொப்பான் - கற்பகவிருட்சத்துக்குச் சமானமானவன், துப்பு
- பவளத்தை,  உறழ் - ஒத்த, தொண்டை - கொவ்வைக் கனிபோன்ற,
வாயார்   -   சிவந்த   வாயையுடைய  ஸ்திரீமார்கள், தொழுதெழு -
வணங்கிச்   செல்லும்படியான,  காமன் - மன்மதனாகும், கண்டாய் -
தெரிந்தனையா?, எ-று.                                     (4)

 228. ஊனுமிழ்ந் திலங்கும் வைவேல் மன்னவ னுள்ளத் துள்ளாள்
     தேனுமிழ்ந் திலங்கு மைம்பாற் றேவிதா னிராம தத்தை
     வானுமிழ்ந் திலங்கு மின்போல் வருந்துநுண் ணிடையாள் வாரி
     தானுமிழ்ந் தமிழ்து பெய்த கலசம்போற் றனத்தினாளே.