பக்கம் எண் :


106மேருமந்தர புராணம்  


 

மூன்றாவது

பத்திரமித்திரன் அறங்கேள்விச்சருக்கம்

--------

 224. மந்தர நடுவ தாகக் குலமலை யாறின் வந்த
     அந்தரத் தேழு நாடா மாறுமீ ரேழ தாகிச்
     சுந்தரத் தடங்க ளாறிற் சூழ்ந்தவே திகைத்து மாகி
     நந்திய மதியி னின்ற நாவலந் தீவி னுள்ளால்.

     (இ-ள்.)  மந்தரம்   -   மஹம்மேருபர்வதமானது,  நடுவதாக -
மத்தியிலுள்ள   தாயிருக்க,  குலமலையாறின் - ஆறுகுலகிரிகளினால்,
வந்த   -   உண்டாகிய,   அந்தரத்து  -  இடைவெளியில்,  ஆம் -
இருக்கின்ற, ஏழுநாடு - பரதாதி ஏழுநாடுகளையும், ஆறு ஈரேழதாகி -
பதினான்கு ஆறுகளையுமுடையதாகி,  சுந்தரம் - அழகிய,  ஆறின் -
ஆறென்னுமெண்ணிக்கையையுடைய,  தடங்கள் -  பொய்கைகளையும்,
சூழ்ந்த   -  சூழ்ந்திராநின்ற,   (மஹாலவண   ஸமுத்திரத்தினுடைய),
வேதிகைத்து  மாகி   -  வஜ்ர வேதிகையையுமுடையதாகி,  நந்திய -
நிறைந்திராநின்ற,  மதியின் - ஸம்பூர்ணச் சந்திரனைப்போல,  நின்ற
- வட்டமாய் நிலைபெற்றிருந்த,  நாவலந்தீவினுள்  -  ஜம்பூத்வீபத்திலே,
எ-று.

     ஆறும் என்பதில் உம்மை - அசை.                     (1)

 225. பாகதுண் டத்தைப் போலும் பரதகண் டத்துச் செம்பொன்
     நாகதுண் டத்தை யொக்குந் தருமகண் டத்து நல்ல
     போகதுண் டத்தைப் போலுஞ் சீயமா புரத்தைச் சூழ்ந்து
     மேகதுண் டங்கள் மேயுஞ் சோலைநா டுண்டு திங்கள்.

     (இ-ள்.) திங்கள் - சந்திரனுடைய,  பாகதுண்டத்தைப் போலும் -
பாதிப்பாகத்துக்குச் சமானமாகிய, பரதகண்டத்து - பரதக்ஷேத்திரத்தில்,
செம்பொன் - சிவந்த பொன்னாலாகிய, நாகதுண்டத்தை  யொக்கும் -
தேவலோகத்தின்  ஒரு பாகத்துக்குச் சமானமாகிய,  தருமகண்டத்து -
தர்மகண்டத்திலே,  நல்ல   -   நன்மையாகிய,   போகதுண்டத்தைப்
போலும்   -  உத்தமபோக  பூமிக்குச்   சமானமாகப்  போகங்களில்
மிகுதியான, சீயமாபுரத்தை  - ஸிம்ம மஹாபுரமென்னும் பட்டணத்தை,
சூழ்ந்து - வளைந்து, மேகதுண்டங்கள் - மேகஸமூகங்கள்,  மேயும் -
வியாபித்து நிற்கும், சோலை - (உன்னதமாகிய)  தோப்புகளையுடைய,
நாடு - தேசமானது, உண்டு - உளது, எ-று.                   (2)