ஓதும்இக் கற்பம் வேதற் கொருதினம் அந்நாள் முப்ப தாதல்ஓர் மதியாம் திங்கள் ஆறிரண் டாயின் ஆண்டாம் ஏதமில் வருடம் நூறேல் இருவகைப் பரார்த்த மாகப் போதரும் போதில் அன்னான் பொன்றுவன் மன்ற மாதோ. 17 | சொல்லப்படும் இந்தக் கற்பம் பிரமனுக் கொருதினமாய் அந்நாள் முப்பது கொண்டது ஓர் மாதமாம். அங்ஙனம் பன்னிரண்டு கொண்டது ஓர் வருடமாம். குற்றமில்லாத அவ்வருடங்கள் நூறாயின் இருவகைப் பரார்த்தங்களாக நடைபெறும். அக்காலத்தில் அப்பிரமன் நிச்சயமாக அழிவான். கால அளவைப் படலத் திறுதியிற் காண்க. அம்மலர்க் கிழவன் காலம் அரிக்கொரு தினம்அன் னோனும் அம்முறைத் திங்கள் கூடும் ஆண்டுநூ றெய்திற் பொன்றும் அம்மவோ சீசீ இந்த அநித்திய வாழ்வு வேண்டேன் இம்மையில் வீடு பேற்றிற் குபாயமே அறிதல் வேண்டும். 18 | அப்பிரமன் ஆயுட் காலம் திருமாலுக்கொருநாள்; அத்திருமாலும், நாளும், மாதமும், ஆண்டுமாக நூறு எய்தில் அழிவான். அம்மவோ சீசீ இந்த நிலைபேறில்லாத இல்வாழ்க்கையை விரும்பேன். இப்பிறப்பிற்றானே முத்தியடையும் உபாயத்தை அறிதல் வேண்டும். அம்மவோ இரக்கப்பொருளும், சீசீ இகழ்ச்சிக் குறிப்பும் கொண்டன. எண்ணருந் தவம்தா னங்கள் பட்டினி எச்சந் தானோ புண்ணிய நன்னீ ராடப் போதலோ முத்திக் கேது நண்ணும்இவ் வனைத்துந் தேற நமக்கெலாங் குருவாம் பொற்பேர் அண்ணலை வினாது மென்னத் துணிந்தனன் அமரர் கோமான். 19 | நினைப்பரிய தவமோ, தானமோ, உபவாசமோ, வேள்வியோ, தீர்த்த யாத்திரையோ முத்தி அடைதற்கு ஏதுவாகப் பொருந்தும் எனத் தெளிய அறிய நம்மனோர் யாவர்க்கும் குரு ஆகும் பொன் எனப் பெயரிய வியாழ பகவானை வினாவுதும் எனத் துணிந்தனன் இந்திரன். நீராட்டோ என்னாது நீராடப் போதலோ எனக் கூறியது ‘தீர்த்த யாத்?்திரை’ எனல் பற்றியென்க. குரு - அஞ்ஞானத்தைப் போக்குவோர். தானம் - அறவழியிற் றேடிய பொருளைத் தன் குறைதீரத் தக்கோர்க்குக் கொடுத்தல். ‘சிவி’ என்னும் பெயரும், புகழும் திசையெலாம் பரவிய தேவர்களுக்குத் தலைவன். அவையகத் துள்ளார்க் கெல்லாம் விடைஅளித் தெழுந்து போந்து நவையற விரைவின் அந்தப் புரத்தினை நணுகி அங்கண் புவிபுகழ் குரவற் கூவிப் போற்றிநின் றிதனை விள்வான் சிவியெனத் திசைபோங் கீர்த்தித் தேவர்கட் கிறைவன் மன்னோ. 20 | அவையில் இருந்தோர் யாவர்க்கும் விடைகொடுத்து எழுந்து போய் விரைவாகத் தனியிடத்தை அணுகி அவ்விடத்து உலகெலாம் புகழும் ஆசாரியனை அழைத்துப் போற்றித் தக்க ஆதனத் திருத்தித் தான் நின்று குற்றம் (ஐயம்) தீர இதனைக் கூறுவான். |