மேற்குப்பக்கத்தில் சத்திய விரத தீர்த்தம் ஒன்று மிகவும் மேன்மை பெற்றுடையது. நூல்களெல்லாம் பெரிதும் போற்றும் சைவ விரதம் மேற்கொண்டு அவ்விடத்துச் சென்று ஊற்று எழும் தட நீராடி. பசுபதி விரதம்-சிவசங்கற்பம், உதகம்-நீர், விதியுளி முடித்துநித் தியநை மித்திகம் புதியநீ றுடலெலாம் பொதிந்து புண்டரம் மதிநுதல் விளங்கிட அக்க மாமணி நிதியெனப் பூண்டுநல் லொழுக்கம் நீடியே. 35 | நூன்முறை தெரிந்த சீலத்தில் நாட்கடனும், விசேட நிகழ்ச்சியும் ஒருங்குற முடித்துப் புதிய திருநீற்றை உடம்பு முழுதும் பூசி (முழுநீறு பூசி) மதிக்கத்தக்க நுதல் விளக்கம் பெறத் திரிபுண்டரமாகத் தீட்டி உருத்திராக்கவடம் பெருஞ்செல்வமாக மதித்தணிந்து நல்லொழுக்கத்தில் தங்கி, தெள்ளொளிப் பளிங்கெனச் சிறந்த செவ்விசால் வெள்ளொளிச் சத்திய விரத நாதனை உள்ளகக் கமலத்தின் வழிபட் டுண்மையான் நள்ளலர்க் கடந்தவ முத்தி நண்ணுவாய். 36 | பகைவரைக்கடந்த இந்திரனே, தெளிந்த ஒளியினையுடையபளிங்கு போலச் சிறந்த பொலிவமைந்த வெள்ளிய ஒளியினையுடைய சத்திய விரத நாதனை உள்ளத் தாமரையில் உண்மையோடு வழிபாடு செய்து முத்திப் பேற்றினை அடைவாய். புறப்பகையையும், அகப்பகையையும், வென்றவன் ஆகலின், ‘நள்ளலர்க் கடந்தவ’ என விளிக்கப்பட்டனன். என்றலும் இந்திரன் இறைஞ்சி என்கொலோ வென்றிகொள் சத்திய விரதங் கேள்வியால் தொன்றுள தொடர்புபோல் சுழலும் என்மனம் சென்றுபற் றியதெனக் குரவன் செப்புவான். 37 | என்று கூறியபோது இந்திரன் வணங்கிப், பொறிவழிச் சென்று கொட்புறும் என்மனம் வென்றி கொண்ட சத்திய விரதத்தைக் கேட்ட மாத்திரையால் முன்பு பயிற்சி பெற்றாற்போலச் சென்று பற்றியதற்குக் காரணம் யாதோ’ என வினவ வியாழப் புத்தேள் விடை கூறுவார். உள்ளது கூறினை உம்மை ஆயிடை அள்ளிலைக் குலிசிநீ அணைந்து புந்திநாள் வெள்ளநீர்ச் சத்திய விரதம் மூழ்கிஈண் டெள்ளரும் விண்ணகர்க் கிறைமை எய்தினாய். 38 | கூரிய இலை வடிவமைந்த வச்சிராயுதத்தை உடையை ஆகிய நீ உள்ளது கூறினாய் முற்பிறப்பில் அவ்விடத்தை அணுகிப் புதன்கிழமையில் சத்திய விரத தீர்த்தத்தில் மூழ்கி இப்பொழுது இகழ்ச்சியில்லாத விண்ணுலகிற்குத் தலைவன் ஆயினை, |