ஒருபொழு தாடினர் உம்பர் கோனிடம் இருபொழு தயனிடம் எண்ணும் முப்பொழு தரியிடம் நாற்பொழு தாயின் முத்தியே மருவுவர் யார் அதன் வண்மை கூறுவார். 39 | ஓர் பொழுது சத்திய விரதத்தில் நீராடினர் இந்திரபதம் பெறுவர்; இருபொழுது மூழ்கினோர் பிரமபதம் அடைவர்; முப்பொழுது மூழ்கியோர் திருமால் பதவியைப் பெறுவர்; நாற்பொழுது மூழ்கினராயின் வீட்டினைத் தலைப்படுவர். அத்தீர்த்தத்தின் கொடைக்குணத்தையாவர் கூற வல்லவர். புந்திநாள் முழுகுநர் புகுவர் முத்தியின் அந்தநாள் மூழ்கலின் அரச நீயும்இப் பந்தமில் வீடுறற் பாலை யாயினை மந்தணம் இதுவெனக் கேட்ட வாசவன். 40 | அரசனே, புதன்கிழமை அத்தீர்த்தத்தில் மூழ்குவோர் முத்தியைத் தலைப்படுவர். நீயும் அந்நாளில் மூழ்கினமையால், இப்பாச மில்லாத வீட்டினை அடைதற்குரிமை உடையை ஆயினை; இதுவே இரகசியம் (உட்கிடை) எனக் கூறச் செவிமடுத்த இந்திரன், பந்தம் இல் வீடு-‘முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்ட சிவனடியைச் சேரும் முத்தி’ (சிவ-சி-264) பந்தம் உள்ளன: ‘இம்மையே’ என்னுஞ் செய்யுளினும் (சிவஞான சித்தியார்) ‘அரிவையர்’ என்னும் செய்யுளினும் (சிவப்பிரகாசம்) காண்க. மந்தணம்-இரகசியம் (தலவிசேடப் படலம் 31.) இப்பெருந் தீர்த்தநீர் எற்றை ஞான்றினும் அப்புத வாரநாள் அதிக மாயதென் செப்புதி என்றலுந் தேசி கப்பிரான் ஒப்பறு கருணையின் உரைத்தன் மேயினான் 41 | சத்திய விரத தீர்த்தநீர்க்கு மற்றைய ஆறுநாட்களினும் புதன் கிழமை சிறப்பு மிகுவது என்னை? அதனைக் கூறுக எனலும் ஞான மூர்த்தியாகிய குரு உவமையில்லாத பெருங் கருணையினாலே உரைத்தலை விரும்பினார். வாரம்-உரிமை. புதன் வழிபட்ட வரலாறு கொச்சகக் கலிப்பா மதிக்கடவுள் தாரைதனை மணந்தீன்ற மகவான புதக்கடவுள் கிரகநிலை பெறுவதற்குப் புரிதாதை கதித்துரைத்த மொழியாறே கருதருஞ்சத் தியவிரதப் பதிக்கண் அணைந் துயர்தீர்த்தம் படிந்தாடித் தவஞ் செய்தான். 42 | |