பக்கம் எண் :


160காஞ்சிப் புராணம்


திருமால் காஞ்சியில் இறைவனை வழிபடுதல்

அங்கப்பொழு தேவிடை கொண்டருட் காஞ்சி எய்திப்
பொங்கிப்பொலி தீர்த்த நறும்புன லாடிச் சூழும்
தெங்கிற்பொலி இந்திர நன்னகர்த் தென்தி சைக்கண்
துங்கச்சிவ லிங்கம் இருத்தி மெய் யன்பு தோன்ற.       7

     அப்பொழுது விடைபெற்றுக்கொண்டு விசேட அருளுக்கிடனாகிய
காஞ்சியை அணுகி மிக்குப் பொலிகின்ற தீர்த்தத்தில் மூழ்கித்தென்னை
மரங்கள் சூழ்ந்து பொலிவுறும் இந்திர புரத்திற்குத் தென் திசையில் ஏனைத்
திருவுருவங்களினும் உயர்ச்சி மிகும் சிவலிங்கப் பிரதிட்டை செய்து விளங்க
ஆவாகித்து மெய்யன்பு உண்டாக.

     மெய் அன்பு-பொது அறுபத்தி.

தெண்ணீர்த்தடம் ஒன்று வகுத்துத் திருந்த மூழ்கி
வெண்ணீற்றணி அக்க மணித்தொடை மெய்வி ளங்கக்
கண்ணீர்க்கம லம்பல கொய்து கருத்து வாய்ப்ப
வண்ணீர்ச்சிவ பூசனை நித்தலுஞ் செய்து வாழ்ந்தான்.   8

     தெளிந்த நீர்சூழ்ந்த தடம் ஒன்றனை வகுத்தமைத்துச் செவ்வனே
நீராடி வெண்ணீற்றணியும், உருத்திராக்கத் தாழ்வடமும் மேனியில் விளங்கத்
தேனாகிய நீருடைத் தாமரை மலர்கள் பல கொய்து மனம் ஒன்ற வளப்பத்
தன்மை வாய்ந்த சிவபூசனையை நாடொறுஞ் செய்து வாழ்ந்தனன்.

கசேந்திரன் தொண்டு செய்தல்

மேற்படி வேறு

அன்னோன் ஏவல் மெய்ப்பணி ஆற்றும் அன்புந்தத்
தன்நே ரில்லா ஓர்மத வேழந் தான்எய்தி
என்நா யகனே என்பணி கொள்வாய் என்றேத்திப்
பொன்வாள் தோன்று முன்னர் எழுந்து புனலாடி.     9

     அத்திருமாலின் ஏவலாகிய மெய்த்தொண்டு செய்யும் அன்பு
தூண்டுதலாலே தனக்குச் சமம் தானேயாய ஓர்மத யானை அங்குற்று ‘என்
தலைவனே; என் தொண்டினை ஏன்று கொள்வாய்’ எனத் துதித்து இசைவு
பெற்றுச் சூரியன் உதிக்கு முன்னர்த் துயில் எழுந்து நீரில்மூழ்கி.

     பொன் வாள்-பொன் போன்ற ஒளி; சூரியன் ஆகுபெயர் (சிவ. சூ)
ஆசிரியர் உரை காண்க.

நாளலர் தாமரை பாதிரி வில்லம் நறும்புன்னை
தாளுயர் சண்பகம் மல்லிகை தண்கழு நீர்மௌவல்
கோளறு கோங்கு முதற்பல கொய்து கொடுத்தென்றும்
வேளை அளித்தவன் உள்மகிழ் வித்திடும் அந்நாளில்.     10