பொதுமை நீத்துநின் திருவடிக் கன்புபூண் டொழுகக் கதுவு நின்னருள் நாள்தொறும் எம்வயிற் கலப்ப விதுமு டிச்சடை வள்ளலே அருளென வேண்ட அதுவ ழங்கினன் விடைகொடுத் தருளினன் அமலன். 59 | ‘ஏனைத் தேவரொடும் ஒப்பவையாது அவர் தம்மை விலக்கி நின் திருவடிக்கே சிறப்புடைய அன்பு பூண்டொழுகவும், நீங்காது இறுகப் பற்றியுள்ள திருவருள் எப்பொழுதும் எம்மிடைவிரவவும் இளம்பிறை சூடிய சடைமுடி வள்ளலே அருள்செய்’ என வேண்ட அவ்வரத்தை அவர்களுக்கருள் செய்து இயல்பாகவே பாசங்களின் நீங்கியோன் அவர் தம்மைச் செல்ல விடுத்தனன். பிரான் திருவடிக்கன்பும், அதனாற் பெறும் அருளும் அப்பெருமானே அருள் செய்தல் வேண்டும். ‘‘ஆங்கவ னருளால் பத்திநன் குண்டாம் பத்தியால் அவனரு ளுண்டாம்’’ என்னும் திருவாக்குணர்க. ‘‘அராப்புனை வேணியன் சேய்அருள் வேண்டும் அவிழ்ந்த அன்பால், குராப்புனை தண்டையந் தாள்தொழல் வேண்டும்’’ (கந்தரலங்காரம்) ஆலம் தான் உகந்து அமுது செய்வித்தவனாகலின். ‘வள்ளலே’ என்றனர். காஞ்சியை அடைந்து கடவுளர் வழிபடல் மீண்டு மால்அயன் முதலிய விண்ணவர் குழுமி ஈண்டு நம்பொருட் டிருள்விடம் பருகினன் இறைவன் பூண்ட இப்பெரும் பிழைஅறும் படிசிவ பூசை யாண்டு செய்துமென் றெண்ணினர் தெளிந்தனர் இதனை. 60 | மீளவும் திருமால் அயன் முதலிய தேவர் யாவரும் கூடி ‘இப்பொழுது நம்பொருட்டுக் கரிய விடத்தை இறைவன் பருகினன். ஆகலின் மேற்கொண்ட இப்பெருங்குற்றம் நீங்கும்படி சிவபூசனையை எவ்விடத்துச் செய்வோம்’ என்றாராய்ந்து இதனை நிச்சயித்தனர். தலமும் தீர்த்தமும் மூர்த்தியும் சிறந்தமெய்த் தானங் குலவு காஞ்சிமா நகரமாம் அந்நகர் குறுகி நலமு றச்சிவ பூசனை உஞற்றிடின் நசியா அலகில் பாவமும் நசிக்குமென் றப்பதி எய்தி. 61 | மூர்த்தி, தலம், தீர்த்தம் இம்மூன்றாலும் சிறப்புடைய மெய்த்தலம் விளங்குகின்ற காஞ்சி என்னும் பெருநகரம் ஆகும். அந்நகரைக் குறுகி நன்மை மிகச் சிவபூசனையைச் செய்திடின் அளவில்லாத அழியாத பாவங்களும் அழியும் என்றப் பதியை அடைந்து. அன்று தம்உயிர் அளித்தது மணிகண்ட மென்னும் நன்றி யான்மணி கண்டநா தப்பெயர் இலிங்கம் வென்ற புண்ணிய கோடிநா தர்க்குமேல் பாங்கர் ஒன்றும் அன்பினால் இருந்தினர் பூசனை உஞற்றி. 62 | |