முனிவர்களே! வடக்குத் திசையிலுள்ள மேரு மலையை வில்லாக வளைத்து முப்புரத்தைச் சிரித்தழித்த ஐராவதேசப் பெருமானார்க்கு அணித்தாய தென் திசையில் எழுந்தருளிய உயிரறிவைக் கடந்து நிற்கின்ற பிரானைப் பண்டை நாள் துதி செய்து வச்சிர சரீரம் பெற்ற ததீசி முனிவரர் செய்கையை விரித்துக் கூறுவன் கேளுங்கள். அதீதன்-கடந்தவன்; இது வாளா பெயராய் நின்றது. ‘அடியளந்தான் தாயதெல்லாம்’ (திருக். 610.) ததீசி முனிவர் செய்கை பிருகுவின் மரபில் தோன்றும் பிறங்குசீர்த் ததீசி மேலோன் அருவிமா மதமால் யானைக் குபன்எனும் அரசன் தன்னோ டொருவருங் கேண்மை எய்தி அளவளாய் உறையுங் காலை இருவரும் ஒருநாட் கூடி நகுபொழுதினைய சொல்வார். 4 | பிருகு முனிவர் குலத்துள் தோன்றிய விளங்கிய சிறப்பினையுடைய ததீசி முனிவரர் அருவியைப்போல் மதமொழுகுகின்ற பட்டத்து யானையை யுடைய குபன் என்னும் அரசனோடு நீங்கற்கரிய நட்புப்பூண்டு மிக்குக் கலந்து பொருந்தி யிருக்கும் காலத்தோர் நாளில் இருவரும் இன்பப் பொழுது போக்கில் இவ்வாறு கூறுவர். விப்பிரர் கொல்லோ அன்றி வேந்தரோ பெரியர் என்னும் அப்பொழு தந்த ணாளர் அரசரிற் சிறந்தோ ரென்னச் செப்பினன் ததீசி மன்னன் மன்னரே சிறந்தோர் என்றான் இப்பரி சிருவ ருக்கும் எழுந்தது வயிரப் பூசல் 5 | அந்தணர் பெரியரோ? அரசர் பெரியரோ என்னும் வினாவை எழுப்பிய பொழுது அந்தணர் அரசரினும் சிறந்தோ ரென்று ததீசி முனிவர் கூறக் கேட்ட அரசன் அரசரே சிறந்தோர் என்று கூறினன் இம்முறையில் இருவருக்கும் மனக்காழ்ப்பு உண்டாகிப் பெரும்போர் மூண்டது. அழலென முனிவன் சீறி அடித்தனன் அடித்த லோடும் மழலைவண் டிமிரும் தாரான் வச்சிரம் சுழற்றி வீசிப் பழமறை முனிவன் ஆக்கை இருதுணி படுப்ப அன்னோன் கிழமைகூர் வெள்ளி தன்னை நினைந்துகீழ் நிலத்து வீழ்ந்தான். 6 | முனிவன் நெருப்புப்போலச் சினங்கொண்டு அடித்தனன்; அடித்த அளவிலேமென்மை பெற்ற வண்டுகள் ஒலிக்கின்ற மாலையை அணிந்த குபன் வச்சிராயுதத்தைச் சுழற்றி வீசிப் பழைய மறைகளை உணர்ந்த முனிவரன் உடம்பை இருதுண்டு பட வெட்டி வீழ்த்த அம்முனிவன் உரிமை பூண்ட சுக்கிரனை நினைந்து கீழே நிலத்தில் வீழ்ந்தனன்- |