பக்கம் எண் :


272காஞ்சிப் புராணம்


     அறம், பொருள், இன்பம், வீடென்னும் நூற்பயனையும் உதவும் நான்கு
தீர்த்தங்களைக் கொண்ட இத்தீர்த்தம் இயையுமாறு எல்லா மாதங்களிலும்
சிறந்ததே ஆயினும் பெரிதும் சிறப்புறும் வைகாசி, மாசி, கார்த்திகை, ஆடி
மாதங்கள், இம்மாதங்களிலும் கார்த்திகை மாதமும் அம்மாதத்துள் வரும்
ஞாயிற்றுக்கிழமைகளும் அவற்றினும் மிக்கனவாம்.

பானுநாள் விடியற் போதின் அத்தடம் படிந்தோர் யாவ
ரேனும்அங் கவர்கள் எய்தும் பேறவர் இயம்பற் பாலார்
தானம்நீ ராடல் ஓமம் கணித்தல்அத் தடவுக் கஞ்சத்
தேனலர் இட்ட சித்தி தீர்த்தத்தொன் றனந்த மாமால்.   21

     ஞாயிற்றுக்கிழமை வைகறைப் போதில் அந்நீரில் மூழ்கினோர்
யாவராயினும் அவர் பெறும் பேற்றினை யாவர் கூறும் பான்மையர். தானம்
கொடுத்தலும், நீர் மூழ்கலும், வேள்வியியற்றலும், மந்திரம் செபித்தலும்
அத்தீர்த்தத்தோடு தொடர்புறுமேல் பயன் ஏனைய இடங்களினும் மிகும்.

ஆதலின் அங்கண் மூழ்கி அருங்கொலை யுறாத மேன்மை
தீதறப் பெறுகென் றோதி மிருதசஞ் சீவி னிப்பேர்
மேதகு மனுவும் நல்கிச் சுக்கிரன் விடுப்பப் போந்து
கோதிலா முனிவன் ஓகை கூர்ந்துகாஞ் சியினைச் சேர்ந்தான்.  22

     ’ஆதலான், அத்தீர்த்தத்தில் நீராடி அரிய திறத்தானும் கொலை
எய்தாத சிறப்பினைக் குற்றமறப் பெறுக’ என்றெடுத்தோதி ‘மிருத சஞ்சீவினி’
என்னும் மேன்மை யமைந்த மந்திரத்தினையும் அருளொடுஞ் செவி
யறிவுறுத்துச் சுக்கிரன் ததீசியைச் செலுத்தக் குற்றமற்ற அத்ததீசியும் மகிழ்ச்சி
மீக்கூர்ந்து காஞ்சிமா நகரைச் சேர்ந்தனன். ததீசிமுனிவர் வச்சிர யாக்கை
பெறுதல்

சேர்ந்தவன் இட்ட சித்தி தீர்த்தநீர்ப் படிந்து கண்ணீர்
வார்ந்திட இட்ட சித்தி வரதனை அருச்சித் தன்பு
கூர்ந்தனன் சின்னாட் பின்னர்க் குழப்பிறை மோலி தோன்றி
ஈந்தனன் வயிர யாக்கை இனிவருங் கொலைஎய் தாமே.    23

     அம்முனிவன் இட்டசித்தி தீர்த்தத்தில் மூழ்கிக் கண்களில் அன்பு நீர்
பாய இட்டசித்தீசப் பெருமானை அருச்சனை செய்து அன்பு மிகுந்தனன்.
சில நாட்களுக்குப் பின்னே சந்திர சேகர மூர்த்தி எதிரெழுந்தருளி இனிக்
கொலை யுண்ணாதவாறு ததீசி முனிவர்க்கு வச்சிர சரீரத்தைத்தந்தருளினர்.

அவ்வகை வரங்க ளெல்லாம் அண்ணல்பாற் பெற்று மீண்டு
மெய்வகைத் ததீசி எய்தி வேத்தவை வேந்தன் சென்னி
எவ்வமில் இடத்தாள் ஓச்சி உதைத்தனன் இவனுக் கென்று
தெவ்வெனச் சமரின் ஏற்ற மாயனைச் செயிர்த்து வென்றான்.  24