பக்கம் எண் :


278காஞ்சிப் புராணம்


மாண்ட கன்னீச வரலாறு

     மன்னுமெய்க் கிளவிக் கரிமுகன் தென்பால் மாண்டகன்னீசனை
வழுத்திக்,கன்னிஓர் பாகன் அருளினான் மாண்ட கன்னிமா முனிவரன்
என்பான், மின்னிடைக் கடவுள் மடந்தையர் ஐவர் வீங்கிள வனமுலை
திளைத்துப், பொன்னுல கிடத்தின் நுகர்பெரும் போகம் புவிமிசை
இருந்தவா நுகர்ந்தான்.                                  2

     நிலைபெறும் சத்தியமொழி விநாயகர் இருக்கைக்குத் தெற்கில் மாண்ட
கன்னீசனைத் துதி செய்து உமையொரு கூறனாகிய அப்பிரான் அருளினால்
மாண்ட கன்னி முனிவரன் மின்னை ஒக்கும் இடையினையுடைய தேவ
மகளிர் ஐவர்தம் பெருத்த இளைய அழகிய கொங்கைப் பெரும் போகத்தை
விண்ணுலகினை விடுத்து மண்ணுலகில் இருந்தவாறே நுகர்ந்தனன்.

     மதமலம் அறுக்குஞ் சகோதரத் தடநீர் வரைப்பிடை வளாகம்ஒன்
றியற்றி, அதனிடை இனிது வீற்றிருந் தரம்பை அந்நலார் இளமுலைப்
போகஞ், சதமகன் சமழ்ப்ப நுகர்ந்தனன் நெடுநாள் கடைமுறை
முத்தியிற் சார்ந்தான், சிதர்அரித் தடங்கண் ஐயரம் பையர்தந்
தீர்த்தம்என் றுரைப்பதத் தடமே.                           3

     செருக்குதற்கு ஏதுவாகிய ஆணவ மலவலியை மூழ்கினர்க்குக்
கெடுக்கும் சகோதர தீர்த்தத்தின் பாங்கர் இடம் ஒன்றை யமைத்துக்
கொண்டு அதன்கண் இனி திருந் தழகிய அரம்பையராகிய நன்மகளிர்
போகத்தை இந்திரனும் நாணும்படி நெடுங்காலம் அனுபவித்துப் பின்
வெறுத்து முடிவில் முத்தியைத் தலைப்பட்டனர் மாண்டகன்னி முனிவரர்.
அத்தீர்த்தமே செவ்வரி பரவிய அகன்ற கண்களையுடைய ஐயரம் பையர்
தீர்த்தம் எனப் பேசப்பெறும்.

     வரிவிழி சேப்பக் குடமுலை மதர்ப்ப வால்வளை கறங்
கவண்டிமிருந், தெரிமலர்க் கூழைத் தையலார் குடையுந் தெண்புனல்
தடம்அதன் குலைமேல், எரியலர் குடங்கை மாண்டகன் னீசன்
இனிதமர் இருக்கையின் குடசார், அரில்அறுத் தருள்வன் னீசம்
ஒன் றுண்டால் அதுவருங் காரணங் கேண்மின்.                4

     செவ்வரி பொருந்திய கண்கள் சிவப்பவும், பொற்குடத்தை ஒத்த
கொங்கைகள் விம்மவும், வெள்ளிய வளைகள் ஒலிக்கவும், வண்டுகள்
ஒலிக்கின்ற ஆராய்ந்த மலரணிந்த கூந்தலையுடைய அழகிய மகளிர்
மூழ்குகின்ற தெளிந்த நீரையுடைய தடாகத்தின் கரைமேல் மழுவை
அகங்கையிற் கொண்ட மாண்ட கன்னீசப் பெருமான் இனிதெழுந்
தருளியுள்ள தலத்திற்கு மேற்கில் குற்றம் நீக்கி அருள் புரியும் வன்னீசம்
என்றோர் தலம் உளது. அப்பெருமான் வரலாற்றினையும் கேளுங்கள்
மாதவத்தீர்!