பக்கம் எண் :


சகோதரதீர்த்தப் படலம் 279


வன்னீச வரலாறு

     மூதழற் கடவுள் தன்னுடன் பிறந்த முன்னவர் மும்மையர்
உள்ளார், பேதுறா மதுகை மூவரும் விண்ணோர் பெறும்அவி
சுமக்கலாற்றாது, மேதகும் ஆவி இறந்தனர் அதனை விரிதழற்
பண்ணவன் நோக்கி, யாதினிப் புரிவல் எனக்கும்இவ் விடும்பை
எய்துமே என்றுள மழுங்கி.                              5

     பெரிய அக்கினி தேவனின் தமையன்மார் மூவர் மயங்காத
வலிமையுடையர். தேவர் வேள்விவழிப்பெறும் அவியைச் சுமக்கும்
வலியிலராய் மேன்மை பொருந்திய அம்மூவரும் உயிரை இழந்தனர்.
அதனை உணர்ந்த அக்கினி தேவன் ‘இனி யாது செய்வேன்; எனக்கும்
மரணத் துன்பம் நேருமே’ என்றெழுச்சி குன்றி,

     மகோததி யனைய ஐயரம் பையர்தம் வாவியி னுள்ளுறக் கரந்து,
சகோதரர் தம்மை இழந்தஎன் றனக்குச் சகோதரம் நீதடம் புனலே,
உகாதெனைப் புரத்தி என்றுரைத் தங்கண் உறைந்தனன்
அன்றுதொட்டளிகள், முகேரெனப் பாயும் மலர்த்தடம் அதற்கு
மொழிபெயர் சகோதர தீர்த்தம்.                            6

     பெரிய கடலை ஒத்த ஐயரம்பையர்தம் தீர்த்தத்தினுள் புகுந்து மறைந்த
‘உடன் பிறந்தோரை இழந்த எனக்குப் பெருந்தீர்த்தமே! உடன் பிறந்தோய்
நீயே ஆகலின் புறத்தில் தள்ளாது தழீஇ என்னைக்காத்தி’ என்றிரந்துகூறி
அதனிடைக் காலங்கழித்தனன். அந்நாள் முதல் முகேரென்னும்வண்டுகள்
ஒலியெழச் சுழலும் மலர்களையுடைய அத்தீர்த்தம் சகோதர தீர்த்தம் எனப்
பெயர் வழங்கும்.

     எரிதழற் புத்தேள் அன்னணம் உறைய இமையவர் எங்கணுந்
துருவிப், பெரிதிளைப் பெய்தி ஆண்டுவந் துறலும் பெருந்தடத்
துறையுமீன் அவர்க்குத், தெரிதர இயம்பிற் றாகவெங் கனலோன்
செயிர்த்தடைக் கலம்புகுந் தேனைப், பரிவுறக் காட்டிக் கொடுத்த
நீர் தூண்டிற் படுகொலை யுறுகெனச் சபித்து.                  7

     அக்கினிதேவன் அங்ஙனம் மறைந்து வாழத் தேவர் எவ்விடத்தும்
தேடிப் பெறாது பெரிதும் இளைத்து அங்கு வந்து சேர்தலும் அத்தீர்த்தத்தில்
உள்ள மீன்கள் அத்தேவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் உணர்த்த
அக்கினி சினங்கொண்டு ‘அடைக்கலம் புக்க என்னை வருந்துறக் காட்டிக்
கொடுத்த நீவிர் தூண்டிலிற் பட்டுக் கொலையுறுக எனச் சாபம் தந்து,

     மின்னென வெளிக்கொண் டிரந்துநின் றழைக்கும் விண்ணவர்
தங்களை நோக்கி, முன்னுறப் போமின் வருவல்என் றியம்பி
முளரிநீர்த் தடமதன் கரையின், மன்னுவன் னீச வள்ளலை இருத்தி
மரபுளி அருச்சனையாற்றி, அன்னவன் அருளாற் பெற்றனன்
இமையோர் அவியெலாஞ் சுமந்திடும் ஆற்றல்.                8