பக்கம் எண் :


298காஞ்சிப் புராணம்


காண்டலும் உவகை பொங்கிச் செயத்தகு கடன்கள் முற்றித்
தீண்டினோர் பிறவி மாய்க்குஞ் சுரகர தீர்த்தம் அடி
மாண்டரு சுரக ரேச வள்ளலை அருச்சித் தேத்தி
வேண்டினர் வேண்ட லோடும் வெப்புநோய் ஒழியப் பெற்றார்.  42

     கண்டளவே மகிழ்ச்சி மீக்கூர்ந்து செய்யத்தக்க கடன்களை விதிவழி
முற்றச் செய்து தீண்டினோர்க்கும் பிறவி நோயைப் போக்கும் சுரகர
தீர்த்தத்தில் படிந்து மாட்சிமையைத் தருகின்ற சுரகரேச வள்ளற் பெருமானை
அருச்சனை புரிந்து தொழுது துதித்துக் குறையிரந்தனர். அவ்வளவிலே
சுரநோய் நீங்கப்பெற்றனர்.

பெற்றபின் அங்கண் நீங்கிப் பெறலரு மேருக் குன்றின்
உற்றமாத் திரையின் அன்னோர் வயாவுநோய் ஒழிவு பெற்றார்
மற்றவர் அகட்டின் நீங்கி வளங்கெழு சுடர்பொற் சோதி
பற்றிளம் பரிதி நூறா யிரமெனப் பரந்து தோன்றி.        43

     சுரநோய் நீங்கிய பின்னர் அடைதற்கரிய மேரு மலையை நெருங்கிய
அளவிலே தேவர் யாவரும் கருப்ப வேதனை தவிர்ந்தனர். அவர் தம்
வயிற்றினின்று நீங்கிச் சுடர் விடும் பொன்னொளி இளஞ் சூரியர் ஓரிலக்க
மென்ன ஓரொளி பரவித் தோன்றி,

     வயா-வேட்கைப் பெருக்கம்.

வடவரை முழுதுஞ் செம்பொன் வண்ணமாச்செய்து தெண்ணீர்த்
தடநெடுங் கங்கை யாற்றாற் சரவணப் பொய்கை மேவிக்
கடவுளர் முனிவர் எல்லாம் உய்யுமா கருணை காட்டிச்
சுடர்வடி நெடுவேல் அண்ணல் அறுமுகன் தோன்றி னானால். 44

     மேரு மலை முழுதினையும் செம்பொன் நிறத்துத் தன் வயமாக்கித்
தெளிந்த நீர்ப் பரப்பினையுடைய கங்கையாற்றின் வழியே சரவணப்
பொய்கையில் வீற்றிருந்து தேவரும் முனிவரும் யாவரும் பிழைக்குமாறு
அருள் பாலித்துச் சுடர் வடி நெடுவேல் அண்ணலாகிய ஆறுமுகப்
பெருமான் தோன்றி யருளினார்.

சுரந்தவிர்த் தமரர்க் காத்த சுரகர தீர்த்தம் ஆடி
வரந்தருஞ் சுரக ரேச வள்ளலை வணங்கிப் போற்றி
நிரந்தரம் அன்பு செய்யப் பெற்றவர் நெடுநீர் ஞாலத்
தரந்தைநோய் தவிர்ந்து முத்திப் பேற்றினை அடைவர் மாதோ. 45

     சுரநோயைத் தவிர்த்துத் தேவரைக் காத்த சுரகர தீர்த்தத்தில் படிந்து
வரங்களை ஈந்தருளும் சுரகரேச வள்ளலைத் தொழுது போற்றி இடையறாத
பேரன்பினைச் செய்தவர் கடல்சூழ் புவியில் துன்பந்தரும் நோய்கள் நீங்கி
முத்திப் பேற்றினையும் எய்துவர்.

சுரகரேசப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம்-956