பக்கம் எண் :


மகாலிங்கப் படலம் 495


     வியப்புடைய இருபடையும் பதினாயிரம் வருடம் எதிர்ந்து தம்முட்போர்
செய்கையில் நம்மை அடிமையாகவுடைய சிவபிரானார் சுடரும் நெருப்புப்
பொறிகள் நாற்றிசையும் சிந்தச் சிவலிங்கச் சுடர்வடிவமாய் உயர்ந்து தோன்றி
அவற்றின் நடுவில் நின்றனர்.

நின்றசோதி உருவின் நேர்ந்த இரண்டு படையும்
சென்று கரப்ப நோக்கித் தெருமந் தரியும் அயனும்
இன்று தோன்றும் இதுஎன் னென்று தம்முள் எண்ணிக்
கன்றும் இதன்றன் அடியும் முடியுங் காண்டும் என்னா.   9

     எதிர்த்த இருபடைகளும் நடுநின்ற சோதித் திருவுருவிற்சென்று
மறையத் திருமால் பிரமர் அதனைப் பார்த்து மனஞ்சுழன்று ‘இப்பொழுது
வெளிப்படும் இது யாது’ என்று தம்முள் பெரிதும் எண்ணி வெகுண்டெழுந்த
இதன் அடியையும் முடியையும் காண்போம்’ என்று வஞ்சினம் கூறி,

கேழல் எகின மாகிக் கீழும் மேலுந் துருவி
ஊழின் இரண்டைஞ் ஞூறு வருடம் உழிதந் துற்றார்
வாழி முடியைக் காணான் வண்டு முரலும் மலரோன்
பாழிச் சிறகர் முறியாப் பையுள் எய்தி வீழ.         10

     பன்றியாகி நிலமகழ்ந்து கீழும் அன்னமாகிப் பறந்து விசும்பின் மேலும்
முறையே ஆயிரம் வருடம் தேடித்திரிந்தனர். தாமரையோன் திருமுடியைக்
காணானாய் வலியுடைய சிறகுகள் முறிந்து துன்ப மடைந்து வீழ,

நாறுந் துளவத் தவனும் நாடிச் சரணங் காணான்
வீறும் வலியுங் குன்றி எய்ப்பும் இளைப்பும் விரவ
ஏறும் பரவைப் பெருநீர் இடையுள் எழுந்தங்குற்று
மாறும் இருவர் களுமால் எய்தி மருட்கை கொண்டார்.   11

     துழாய் மாலையையணிந்த திருமாலும் தேடித் திருவடியைக் காணாராய்ச்
செருக்கும், வலியும் குறைந்து சோர்வும், மெலிவும் சேர நிவக்கும் பரப்புடைய
கடல் நீரில் எழுந்து தோன்றி மாறுபடும் இருவர்களும் அறியாமை எய்தி
மயங்கினார்,

வேதம், முதல்வன் உண்மை கூறல்

அறுசீரடி யாசிரிய விருத்தம்

     ஏமுறு பொழுதவண் ஒலிவடிவின் நாதம தெழுபுமுன்
இருதிறனாய், ஓம்என உமைஎன மருவிஇருக் கோடுயர் நெறி அருள்
புரிஎசுவும், சாமமும் எனநிலை பெறவிரிவுற் றங்கவை தம்வலி
மிகும்அவர்முன், காமுறு தகையநல் வடிவொடுநின் றினையன
கருணையின் உரைசெயுமால்.                             12