பக்கம் எண் :


517


பாண்டவேசப்படலம்

கொச்சகக் கலிப்பா

பேரின்பச் சாக்கியனார் கல்லெறிக்கும் பேறுதவு
வார்தங்கும் வீராட்ட காச வரவிதுவால்
சீர்தங்கு தென்பால் திருப்பாண்ட வேச்சரமாம்
கார்தங்கும் இஞ்சிக் கடிநகரங் கட்டுரைப்பாம்.      1

     மறவாது அன்பு செய்து கல்லால் எறிந்த சாக்கிய நாயனார்க்கு
அக்கல்லெறிக்கும் பேரின்பமாகிய பேற்றினை வழங்கிய பெருமானார்
வீற்றிருக்கும் வீராட்டகாச வரலா றிதுவாகும். இனி, இதற்குத் தெற்கில்
சிறப்புத்தங்கிய திருப்பாண்டவேச்சரம் எனப் பெயரிய மேகந் தவழும் மதில்
சூழ்ந்த காவலும் விளக்கமும் அமைந்த தலத்தை உறுதி பெறக் கூறுவோம்.

தருமம் பயந்த தநயன் முதலோர்
உருகெழுவெங் காட்டின் உரோமசனே யாதித்
திருமுனிவர் தம்மோடுந் தீர்த்தமெலாம் ஆடக்
கருதி நடந்தார் கழியாத காதலார்.               2

     தருமக் கடவுள் ஈன்ற தருமர் முதலானோர் அச்சத்தைச் செய்யும்
கொடிய காட்டிடை யுள்ள உரோமசர் முதலான தெய்வ முனிவரருடன்
தீர்த்தங்களிற் சென்று படிய எண்ணி நீங்காத பெருவிருப்பினராய் நடந்தனர்.

அங்கங் கிலிங்கம் நிறுவி அருச்சித்துப்
பங்கந் துமிக்கும் பரம்பொருளைப் போற்றிசைத்துச்
சிங்கம் படுக்குந் திறலார் வருநெறியார்
தெங்கம் பொழில்சூழ் திருக்காஞ்சி நண்ணினார்.    3

     சிங்கத்தை யழிக்கும் வலியுடையோர் சென்ற பலவிடங்களில்
சிவலிங்கங்களைத் தாபித்துக் குற்றமறுக்கும் பரம்பொருளை ஆங்காங்குப்
பூசனை புரிந்து துதி செய்து, வருநெறியில் தென்னம் சோலை சூழ்ந்த
திருக்காஞ்சியை அணுகினார்.

அங்கட் பலதளியும் நோக்கி அகமகிழ்ச்சி
பொங்கித் திருக்கம்ப மாதியாப் புண்ணியநீர்க்
கங்கைச் சடிலக் கடவு ளிடமெல்லாம்
துங்கப்பே ரன்பின் தொழுதுதொழு தேகினார்.      4

     ஆங்குப் பல திருக்கோயில்களையும் கண்டு உள்ளம் மகிழ்ச்சி
மீக்கூர்ந்து திருவேகம்ப முதலான புண்ணிய நீராகிய கங்கையைச்
சடையில் அடக்கிய சிவனார் எழுந்தருளிய இடங்கள்தோறும் உயர்வுடைய
பேரன்பொடும் தொழுது தொழுது மேற் சென்றனர்.