பக்கம் எண் :


அனந்தபற்பநாபேசப் படலம் 553


திருமால் சாபமுறுதல்

யாமினிக் கலாய்த்தல் வேண்டல் ஒழிகென இருவர் தாமும்
மாதணி மார்பன் றன்னை வினாதலும் மாயோன் ஐயன்
தாமரை வதனம் நோக்கித் தலைவனும் வென்றான் என்றான்
கோமளங் கவின்ற மேனிக் கோற்றொடி சீற்றங் கொண்டாள். 5

     ‘இப்பொழுது யாம் பகைத்தலை ஒழிவோம்’ என்றிருவரும் தவிர்ந்து
திரு மகளையும், கௌத்துவத்தையும் அணிந்த மார்பினராகிய திருமாலை,
‘யாவர் வென்றவர்’ என வினாவலும் அத்திருமால் பெருமான் திருமுகத்திற்
கஞ்சித் ‘தலைவனே வென்றன்’ என்று கூற அழகு ஓர் அழகு கொண்டனைய
திருமேனியையும் திரண்ட வளையலையும் உடைய அம்மையார்
சினங்கொண்டனர்.

கண்டது கண்ட வண்ணங் கழறிலை வாரம் பற்றித்
தண்டுணர்த் துளவத் தாரோய் கைதவச் சான்று சொற்றாய்
அண்டரும் பிறரும் ஏசக் கட்செவி யாதி என்னா
ஒண்டொடி சபிப்ப மாயோன் உளம்பதைத் திரந்து போற்றி.  6

     குளிர்ந்த துழாய் மாலையோய்! கண்ணாற் கண்ட நிகழ்ச்சியை
நிகழ்ந்தவாறே கூறாது பட்சபாதம்கொண்டு பொய்ச்சான்று கூறினை ஆகலின்,
தேவரும் பிறரும் மன்றோரம் கூறினாயென இகழப் பாம்பாகுக’ என
அம்மையார் சாபமிடத் திருமால் மனம்நடுங்கி குறையிரந்து போற்றி செய்து,

திருமால் வழிபாடு

அடியனேன் மடமை நீரால் அறைந்தது பொறுத்துச் சாப
முடிவளித் தருளாய் என்றென் றேக்கற முதல்வி நோக்கி
நெடிதருள் சுரந்து மாயோய் அஞ்சலை நிலைநீர்க் காஞ்சிக்
கடிநகர் வரைப்பின் ஏகிக் கடிதெமைப் புரிதி பூசை.       7

     அடியனேன் அறியாமையால் நடுநிலை பிறழ்ந்து கூறியதனை அருளாற்
பொறுத்துச் சாபத்திற்குத் தீர்வு அருளாய் என்று பல்காற்குறையிரந்து
விருப்புடன் தாழ அம்மையார் திருக்கண் நோக்கருளிப் பேரருள் சுரந்து,
மாயோனே! அஞ்சாதி. நீர்நிலைகளையுடைய காஞ்சியை அடைந்து எம்மை
விரையப் பூசனைப் புரிவாயாக.

இகழறும் இலிங்க வேதி என்னுறு இலிங்க மூர்த்தி
திகழ்மதிச் சடில மோலிச் சிவபிரான் வடிவு கண்டாய்
புகழ்தரும் இலிங்க வேதிப் பொற்பினால் என்னை நின்பேர்
நிகழ்வுற நிறுவிப் போற்றி நீக்குதி சாபத் தீமை.       8

     புகழ்ச்சியமைந்த சிவலிங்கத் திருமேனி இறைவன் வடிவமும், பீடம்
என்வடிவமும் ஆகும். ஆகலின், அச்சிவலிங்க பீடத்தில் நின் பெயர்
விளங்கத் தாபித்து வழிபாடியற்றிச் சாபப்பயனை நீக்கிக் கொள்வாய். 70