முன்னோர் தற்புருட பிரமகற்ப முற்றுப்பெற்றுப்பின் தோன்றிய சிறப்புடைய அகோர கற்பத்தில் விளங்குகின்ற உலகில் மிக்குள்ள உயிர்கள் யாவும் தழைத்து வாழுநாள் வெற்றிவாய்ந்த பண்டாசுரன் என்னும் கொடியோன் இவ்வுலகின்கண் தோன்றினன். அங்கவன் செய் மாதவத்தால் அகமகிழ்ந்து காட்சிதரும் பங்கயனை அடிவணங்கிப் பன்னுசுரா சுரர்முதலோர் தங்களுடம் பிடைவிரவித் தகைபெறுவீ ரியம் அனைத்தும் நுங்கவரம் அருள்என்றான் முண்டகனும் நுனித்தெண்ணி. 3 | அப் பண்டாசுரன் செய்த பெருந்தவத்தினுக் கெதிர் தோன்றிய பிரமனை அடிபணிந்து ‘‘சொல்லப்பெறும் தேவர் முனிவர் முதலானோர் உடம்பிடைக் கலந்து நின்று சிறப்புறும் இந்திரியம் முற்றவும் பருக வேண்டும் ஆற்றலை அருள்க” என வேண்டினன். மலரவனும் நுட்பமாக ஆராய்ந்து. அற்றாகென் றகலுதலும் அவுணர்கோன் உடம்புதொறும் உற்றாவி யுடன்விரவி வீரியங்கள் உண்டிருப்பப் பற்றாய வீரியம்போய் ஆருயிர்கள் பருவந்து வற்றாத ஒளிமாழ்கி வளர்வின்றி அஃகினவால். 4 | ‘அவ்வாறாகுக’ என்று வரங்கொடுத்து நீங்கிய அளவே அசுரன் உடம்புதொறும் புகுந்து உயிர்போலக் கலந்து இந்திரியங்களை நுகர்ந்தினி திருப்ப ஆதரவாய வீரியங்களை இழத்தலான் உயிர்கள் வருந்தி வற்றாத ஒளி வற்றி வளர்ச்சியின்றிச் சுருங்கின. சிவபெருமானார் உலகொடும் உயிர்களொடும் கலந்துநிற்பவர் அசுரன் உடம்பொடு கலந்துநின்றனன் என வேற்றுமை அறிக. தேவர் முதலியோர் முறையீடு எழுசீரடி யாசிரிய விருத்தம் மருத்துவர் இயக்கர் வானவர் அவுணர் மானிடர் சித்தர்கந் தருவர், உருத்திரர் வசுக்கள் இராக்கதர் அருக்கர் உரகர்சாத்தியர் மருத் துக்கள், அருத்திகூர் விரிஞ்சன் அச்சுதன் பிறரும் அவ்விடர் ஆற்றலர் குழுமித், திருத்தகு கயிலைப் பருப்பதம் புக்குச் சிவபிரான் அடிதொழு துரைப்பார். 5 பேரன்புமிக்க பிரமன் திருமால் முதலானோர் யாவரும் அத் துன்பத்தைப் பொறுக்கும் வலியிலராய்க் கூடித் திருக்கயிலைமலையை அடைந்து இறைவன் திருவடிகளை வணங்கி முறையிடுவார் ஆயினர். வீரியம் இன்றி வலிகுறைந் தடியேம் வெற்றுடம் பெனத்திரி கின்றேம், காரணங் காணேம் அன்னது தவிர்க்கும் உபாயமுங் கண்டிலேம் என்று, நாரணன் முதலோர் உலந்துநின் றிரப்ப நாயகன் நகைமுகிழ்த் துரைக்கும், சீரிய நுமது வீரியம் முழுதும் திருந்துபண் டாசுரன் கவர்ந்தான். 6 |