பக்கம் எண் :


556காஞ்சிப் புராணம்


     ‘‘அடியேங்கள் வீரியம் குறைந்து வலிமை சுருங்கி எலும்பு தோல்
போர்த்த உடம்பினராய் இயங்குகிறோம். இதற்குக் காரணத்தையும் போக்கும்
சூழ்ச்சியையும் அறிகிலோம்.” என்றுகூறி வற்றி நின்று வேண்ட, முதல்வன்
குறுமுறுவலுடன்” நும்முடைய இன்றியமையாத வீரியங்களை முற்றவும்
வரத்தினால் உயர்ந்த பண்டாசுரன் கரவாகக் கொண்டனன்.

     ஆங்கவன் எல்லா உடம்பினும், விரவி ஆவியோ டுறைதலின்
எவ்வா, றீங்கினி வெல்லப் படுவன்என் றருள இமையவர் யாவரும்
வெருவி, மாங்குயிற் கிளவி மலைமகள் கொழுநா மறிதிரை வளைகடல்
உயிர்த்த, பூங்கடு மிடற்றுப் புனிதனே எம்மைப் புரப்பதுன் கடன்எனத்
துதிப்பார்.                                              7

     அசுரன் எல்லா உடம்புகளினும் கலந்து உயிர்களுடன் தங்குதலின்
எங்ஙனம் அழிக்கப் படுவான்” என அருளக்கேட்ட விண்ணோர் யாவரும்
பெரிதும் அஞ்சி” மாமரத்தில் வாழும் குயில்போலும் இனிய மொழியினை
யுடைய மலைமகளார் கணவனே! மறித்து வீசும் அலைகளையுடைய
திருப்பாற்கடலிற் றோன்றிய விடத்தைத் திருக்கழுத்தில் நிறுவிய தூயோனே!
அடியேங்களைப் பாதுகாப்பது முதல்வனாகிய நினக்குக் கடப்பாடெனப்
போற்றினர்.

     போகம் ஈன்ற தான் சத்தியும் சிவனுமாய் உலகத்துக் கெல்லாம்
போகத்தை உண்டாக்கின புண்ணியன் என்றார் திரிபுரத்தை அழித்தும்
நஞ்சுண்டும் பல்லுயிர்களையும் காத்தலின் (சீவக 362. நச்சி) எனவருதலின்
வேண்டுவ கொள்க.

மேற்படி வேறு

முடிவில் ஆற்றலை தன்வ யத்தினை முற்று ணர்ச்சியை பேரருள்
மடிவில் ஆட்சியை தூய மேனியை மற்றி யற்கை யுணர்ச்சியை
படியி லாஇயல் பாக நீங்கிய பாச நோயை வரம்பில்இன்
புடையை உன்னடி யேங்கள் என்றும் உனக்க டைக்கலம் ஐயனே.  8

     தலைவனே! நீ முடிவில் ஆற்றலுடைமை, தன்வயத்தனாதல், முற்று
முணர்தல், அழிவில் பேரருளுடைமை, தூய உடம்பினனாதல், இயற்கை
உணர்வினனாதல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், வரம்பிலின்ப
முடைமை, ஆகிய இவ்வருட் குணங்களை யுடைய; மேலும் அடியேங்கள்
பெத்தநிலையினும் முத்திநிலையினும் உனக்கே அடைக்கலப் பொருள்கள்
ஆவேம்.

     இவ்விருவகை யானும் காத்தல் வேண்டுமென்பது குறிப்பு.

     அண்டம் ஓர்அணு வாம்வ ளர்ச்சியை அணுவின் நுண்ணிய
அண்டமார், பிண்டம் எங்கணும் நின்ற சைக்கும் நிமித்த னாய்நிறை
பெற்றியை, கண்ட யோகியர் சிந்தை மேயினை கரணம் மற்றும்
அகன்றனை, ஒண்டொ டிக்கொரு பங்க யாங்கள் உனக்கடைக்கலம்
ஐயனே.                                                 9