பக்கம் எண் :


பாயிரம் 7


     இடம் பெயர்வனவாகிய சிறப்புடைய எயில்கள் மூன்றனையும்
புன்னகையால் போக்கிய மலவலி கெடுப்போனும் மெய்யறிவைத் தனக்குத்
திருமேனியாக வுடையோனும் ஆகிய சிவபிரான் திருவடிகளைச் சேர்ந்த
அறுபத்து மூவர் திருவடிகளைப் போற்றுவாம்.

     பிற எயில்கள் போலாது இடம் பெயர்தலின் சிறப்புடையது என்பார்
மூது எயில் என்றார்.

சேக்கிழார் நாயனார்

தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி
வாக்கி னாற்சொல்ல வல்ல பிரான்எங்கள்
பாக்கி யப்பய னாப்பதி குன்றைவாழ்
சேக்கி ழானடி சென்னி இருத்துவாம்.             17

     உயர்த்திக்கூறப்பெறும் புகழுடைய திருத்தொண்டத்தொகையை
விரித்துச் சொல்ல வல்லவரும் எங்கள் சிவபுண்ணியப் பயனாகக் குன்றத்தூரில்
அவதரித்தவருமான சேக்கிழார் பெருமானார் திருவடிகளைச் சிரமேற்
கொள்வாம்.

தூக்கு-பிறவிப்படுகுழியினின்று தூக்கும் எனவுமாம்.

திருக்கூட்டத்தார்

அறுசீரடி யாசிரிய விருத்தம்

     பேயன்ன புறச்சமயப் பிணக்குநூல் வழியனைத்தும் பிழையே
யன்றி, வாயன்மை தெளிந்துசைவ சித்தாந்த வழிதேறி அதீதவாழ்வில்,
போயண்மி அஞ்செழுத்தும் திருநீறும் கண்டிகையும் பொருளாக்
கொண்ட, நாயன்மார் திருக்கூட்டம் பணிந்திறைஞ்சும் பெரும்பேறு
நான்பெற் றேனால்.                                    18

     பேய்த்தேர்போலும் புறச்சமய நூல்கள் கூறுவன தவறொடு பொய்
படுவனஎனவும், சைவசித்தாந்த வழியே குற்றம் இல்லது மெய்யாவது எனவும்
தெளிந்து துரியம் கடந்த சுடர்த் தோகையுடன் பிரியாது நிற்கின்றபெருமானை
அவ்விடத்திற் சேர்ந்தடைந்து ஐந்தெழுத்தையும், திருநீற்றையும், உருத்திராக்க
மணியையும் மெய்ப்பொருளாகக் கொண்டொழுகிய நாயன்மார் திருக்கூட்டத்தை
பணிந்து அவரொடும் உறையும் பேற்றினை யான் பெற்றேன், தாழ்ந்துயரும்
தன்மையை எடுத்துணர்த்தினார்.

பஞ்சாக்கர தேசிகர்

     கயிலாய பரம்பரையிற் சிவஞான போதநெறி காட்டும்
வெண்ணெய், பயில்வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர்
மெய்ஞ்ஞான பானு வாகிக், குயிலாரும் பொழில்திருவா வடுதுறைவாழ்
குருநமச்சி வாய தேவன், சயிலாதி மரபுடையோன் திருமரபு நீடூழி
தழைக மாதோ.                                       19