86. ஆய்ச்சியர் கடைந்த மோரு மளையொடு தயிரும் பாலும் காய்ச்சிய நெய்யும் விற்றுக் கரும்பினைக் கசக்கப் பண்ணும் வாய்ச்சியர் தந்த நெல்லும் வழியிடை யுப்புங் கொண்டு போய்ச்சுவை படச்சோ றாக்கிப் புசிப்பர்தங் கிளைக ளோடே. 87. குன்றுறை கோட்டி யானை குறுகியே பழனந் தன்னைத் தின்றுசெங் கரும்பைக் கையிற் செழுங்கிளைக் காகக் கொண்டு சென்றிடும் வழியில் வேங்கை செருக்கவக் கரும்பாற் றாக்கி வென்றதை யெயினர் கொள்ள வீசிவே தண்டஞ் சாரும். 88. புல்லிய சுடுவெம் பாலைப் புறாவயல் மருதம் புக்கு நெல்லயின் றேகும் போது நீர்க்கொடி பலவைக் கவ்விச் செல்லவே யிளம்பார்ப் பென்று செருச்செய் தச்சுளைப் பலாவை முல்லையாய்ச் சிறுவர்க் காக்கி முனைப்பொடு பறந்து செல்லும். 89. அஞ்சிறைப் பொன்காற் பூவை யலர்குருந் திருந்து கேட்பப் பஞ்சிறைப் பவளச் செவ்வாய்ப் பைங்கிளி குறிஞ்சி பாடும் நெஞ்சுநெக் குருகித் தும்பி நெய்தலை நீத்துச் செல்ல வஞ்சியர் முகம்போ லுந்தா மரையளி மருதம் பாடும். 90. வரைதரு பொருளுங் கானம் வழங்குறு பொருளுஞ் செந்தா மரைதரு மருத வேணி மலிதரு பொருளு முந்நீர்த் திரைதரு பொருளு முள்ளூர் செறிதரு பொருளு மெங்கும் விரைதரு பொருள வாகி மெய்மயக் குறுத்த தம்மா. 91. யாணர் கொண்டெதிர்ப் பாடான வதரிடைச் சிறுபேர் நல்யாழ்ப் பாணரும் பொருநர் தாமுங் கூத்தரும் பருங்கட் செவ்வாய்ப் பூணணி விறலி யோடு புலவரும் பெற்ற செல்வம் மாணுறப் பெறவே யாற்றுப் படுக்குவர் வள்ளி யோர்பால். 92. முல்லையைக் குறிஞ்சி சார முல்லைமற் றதனைச் சார எல்லியுண் டாக்கு பாலை யிருமையுஞ் சேரச் சார மல்லலஞ் செறுவை நெய்தல் மருவிட மருதந் தன்னைப் புல்லிடக் கழியை யைந்தும் புணரியாப் புறுமாங் காங்கே. ------------------------------------------------------------------------------------------ 86. அளை - வெண்ணெய். 87. எயினர் - பாலைநில மக்கள். வேதண்டம் - மலை. 88. கொடி - காக்கை. பலாச்சுளையைத் தன் குஞ்சென்று மயங்கியது புறா. 89. பஞ்சு - செம்பஞ்சு. இறை - தங்குதல். 90. ஏணி - நாடு. விரைதல் - ஒன்றுக்கொன்று முற்படுதல். 91. இதுவும் ஐந்நிலத்தும் நிகழ்வது. |