60. தண்டமி ழகத்தை முற்றுந் தனிக்குடை நிழலிற் காவல் கொண்டநின் பெருமைக்கேற்ற குணமுமொத் திருத்தல் யாருக் குண்டுநின் றலைமைக் கேற்ற வொப்பிலா வெங்கள் மன்னன் பெண்டினைக் காதல் கொண்ட பெருமையே பெருமை யென்றார். 61. பெருமையீ தொன்று மில்லைப் பிரிவுவேற் றுமைய தின்றி ஒருமையாய் நன்னீர் போல யுயர்ந்தசெந் தமிழின் காதல் பெருமையுஞ் சிறுமை யென்னும் பிரிவிலா தாண்பெண் ணுள்ளத் தொருமையே தழிழ ரெல்லா மொருகுலைக் காய்க ளன்றோ. 62. ஒருவனு மொருத்தி யுங்கண் டுருவொடு பிறவு மொப்பின் இருவரி னுள்ளத் தேநின் றெழுதரு முண்மைக் காதல் பருகிய கண்க ளூடு பாய்ந்துளந் தம்மை யாத்தே இருமையை யொருமை யாக்கும் யாங்களு மவ்வா றானோம். 63. ஆதலி னெனக்கு முன்ன ரமைச்சரே யுங்கள் மன்னன் காதலின் சிறப்பி னோடு கடமையு மறிந்து மேலோர் ஓதிய படியே யென்பா லுங்களை விடுத்தா னீதில் பேதைமை யின்று பெண்ணைப் பெற்றவர் கடன தாமே. 64. என்றுமே யினைய கூறி யெனக்குரி யாளை யெற்கே மன்றல்செய் திடவி யைந்த மன்னற்கென் வணக்கங் கூறி நின்றது புரிவீ ரென்று நெடியனு மவரோ டுண்டே அன்றிலி னியற்கை யானா னமைச்சருந் தொழுது போனார். 65. அன்னவர் சென்ற பின்ன ரருந்தமி ழரசர் கோனும் பொன்னையு மெனையு மொன்றாய்ப் பொருத்துநா ளெந்தன் னாளோ அன்னது வாழ்க வென்றே யனைத்தையு மறந்தன் னாளை உன்னினா னுள்ளக் கோயி லுள்ளுரு வெளிப்பா டானாள். ------------------------------------------------------------------------------------------- 62. யாத்தல் - கட்டுதல். ஒப்புமையை - மெய் - 25இல் காண்க. 64. நின்றது - இனி ஆகவேண்டியது. அன்றிலின் இயற்கை - பிரிவாற்றாமை. அன்றில் இணைபிரியாத காதலன்புடைய ஒரு பறவை. | |
|
|