பக்கம் எண் :


இராவண காவியம் 213

   
         53.    மற்றவள் செயலைக் கேட்ட மன்னனு மினியென் னையம்
               பெற்றவர் நாமே பெண்ணைப் பெற்றபே றுறுதி பெற்றோம்
               கற்றவர் களிக்கு மேன்மைக் கலைவலோ னான நந்தங்
               கொற்றவன் கருத்தென் னென்று குறித்தறிந் திடுவோ மென்றான்.

         54.    அண்ணலு மமைச்சர்க் கோத வவருநல் லதுவே யென்னப்
               பண்ணிடைப் படர்ந்து பாணி பற்றியே யாழிற் பாய்ந்து
               தண்ணுமை தழுவிச் செல்லுந் தமிழிசை வலோற்கு நந்தம்
               பெண்ணியல் போதி யன்னான் பெட்பினைப் பெற்று வாரும்.

         55.    என்றுமே யமைச்சர் தம்மை யேவவன் னாரு மந்தக்
               குன்றுபின் னான வேகிக் குலமகன் குன்ற ராகித்
               தன்றமர் வருக வென்னத் தமிழ்க்கொடி வரவேற் கப்போய்
               மன்றலந் தாரி னானைக் கண்டுமே வணங்கி நின்றார்.

         56.    மன்னவர் மன்னன் கண்டு வருகென வுடனி ருத்தி
               அன்னவர் வந்த தென்னென் றவாவுடன் கேட்க வன்னார்
               மன்னவன் கருத்தைச் சொல்ல மற்றவன் வருந்தித் தேடும்
               பொன்னது தானே வந்து பொருந்தினாற் போலின் புற்றான்.

         57.    மதிவலி யமைச்சர் காள்நும் மன்னவன் கருத்து முற்றும்
               புதிதல யானு முங்கள் பூவையுங் கண்டு காதல்
               முதிரின மதனை மன்னன் முடிவுறச் செய்வ தன்னான்
               எதிரிய கடனே யாகு மெனக்குமஃ துடன்பா டென்றான்.

         58.    அவ்வுரை செவிபு காமுன் னமைச்சர்க ளரசை வாழ்த்திச்
               செவ்விய வறிவி னோர்க்கே செய்வதீ தென்று காண
               ஒவ்வுமஃ தன்றி நேர்மைக் குடன்படு வார்க ளன்றி
               அவ்விய நெஞ்சத் தார்க்கீ தடுக்கமோ வதுவு மன்றி;

         59.    வலியவந் தனனென் றெண்ணி மறுப்பரின் றேலீ தென்ன
               எலியொரு புலியைச் சொந்த மேற்கவெண் ணுதலே போல
               இலையவ னமக்கொப் பென்றே யிகலுவ ரிகலார் தங்கள்
               வலிதொலைந் துயர்த்தவே லோய்மதியன்றே மாண்புத் தோழன்.
-------------------------------------------------------------------------------------------
         54. பாணி - தாளம். பெட்பு - விருப்பம். இங்கே உடம்பாடு. 57. எதிரிய - ஏற்ற. 58. ஒவ்வும் - பொருந்தும். அவ்வியம் - பொறாமை.