47. வையணை வேலும் பிறபடை யொடுபன் மலரொவ்வா மையணை யிருகட் கடைமலர் முத்த மணிசிந்த ஐயணை கொள்ளா தேநில மார வனமன்னாள் கையணை யாக வேயொரு நாளுங் கழிவிப்பாள். 48. இன்னு மென்னெல் லாமோ பித்திய ரேபோலத் தன்னந் தனியா விட்டவள் போலத் தான்செய்யத் தன்னிய லொத்த தோழிய ரஞ்சித் தாய்க்கோத அன்னையு நொந்து தோழியர் தம்மோ டாய்வுற்றாள். 49. என்னே யிவளுக் கெய்திய நோய்தா னிதுவாக என்னோ தெரியே மென்செய் கோமென் றேநொந்து தன்னேர் காதற் றோழியி னோடு தாங்கூறிப் பொன்னோ டவளை விட்டெல் லோரும் புறம்போந்தார். | அறுசீர் விருத்தம் | 50. காதலந் தோழி யுள்ளக் கருத்தினை மறுக்கி லாது மாதியான் மனத்துட் கொள்ள மடத்தகை மயிலே யின்னென் றோதுக வதனை யாவ துஞற்றுகே னென்னப் பொன்னும் ஈதவர் பிரிவே யென்ன வியலறத் தொடுநின் றாளே. 51. அன்னவள் செவிலிக் கோத வவளனைக் கோத நன்றாய் தன்னருங் கொழுநற் கோதத் தமிழிரா வணனே யானால் என்னயாம் பேறு பெற்றே மெண்ணமுற் றுறுக வேமா மன்னனை விருந்தேற் றுண்மை வரன்முறை யறிதுமென்றான். 52. உற்றதைத் தோழி மார்சென் றோதலு மாயோன் செல்வி வற்றிய மேனி விம்ம மதிமுகம் நிலவு காலப் பொற்றொடி யிறையைத் தின்னப் பொம்மலுற் றவனை யெய்தப் பெற்றவள் போல வின்பம் பெற்றவள் நாணும் பெற்றாள். ------------------------------------------------------------------------------------------- 47. வை - கூர்மை. ஐ அணை - ஐந்துவகையான படுக்கை. அவை - சிறுபூளை, செம்பஞ்சு, வெண் பஞ்சு, சேணம், அன்னத்தூவி. சேணம் - மயிர்கழியாத தோல். 50. உஞற்றுதல் - செய்தல். அறத்தொடு நிற்றல் - உள்ளதை உரைத்தல். 51. அனை - நற்றாய். வரன்முறை - நடந்தவாறு. இது, மகள் கருத்தறியக் கூறினான். 52. இறை - முன்கை. பொம்மல் - பொருத்தல். | |
|
|