பக்கம் எண் :


இராவண காவியம் 25

   
     தன்மான இயக்கத்திற்கும், பகுத்தறிவுக் கொள்கைக்கும், இவற்றிற்கெல்லாம்
மேலாகத் தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ்க் கவிதையுலகிற்கும் செயற்கரிய பெருந்தொண்டு
செய்தவராகப் புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைக் குறிப்பிடலாம்.

     இருபதாம் நூற்றாண்டு, தமிழ் இலக்கியத்திற்கு ஒரு பொற்காலம் எனினும், தமிழில்
பாரகாவியங்கள் - மாகாவியங்கள் வெளிவரவில்லை. பாரதியும், பாரதிதாசனுங்கூட
மாகாவியங்கள் ஏதும் செய்யவி்ல்லை. இந்நிலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்திய
நாட்டில் பொதுவாக எந்த மொழியிலும் பாரகாவியங்கள் வெளிவரவில்லை. இலக்கிய
நோபல் பரிசு பெற்ற வங்கப் பெருங்கவிஞர் தாகூர்கூட ஒரு பெருங்காவியத்தைச்
செய்யவி்ல்லை.
           புரட்சிக் கவிஞர் ‘வீரத்தமிழன்’ என்னும் தலைப்பில்,
     தென்றிசையைப் பார்க்கின்றேன் என்சொல்வேன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்கு தடடா!
அன்றந்த இலங்கையினை ஆண்டமறத் தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடை கொடுக்கும் கையான்
குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்
என்றமிழர் மூதாதை என்றமிழர் பெருமான்

இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்.

வஞ்சக விபீடணனின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை நல்யாழின் நரம்புதனைத் தடவி
நிறையஇசைச் செவியமுது தரும்புலவன் தன்னை
வெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும் சூழ்ச்சி
விரும்பாத பெருந்தகையைத் தமிழ்மறைகள் நான்கும்
சஞ்சரிக்கும் நாவானை வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன் மறந்தவரைச் சழக்கரெனச் சொல்வேன்.

வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்
விசையொடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும்
காழ்ச்சிந்தை மறச்செயல்கள் மிகவும் வேண்டும்
கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்
கீழ்ச்செயல்கள் விடவேண்டும் இராவ ணன்றன்
கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்