பக்கம் எண் :


இராவண காவியம் 281

   
        20.    பெருமை யானவுன் நாட்டையுன் வலியினாற் பெரிதும்
              அருமை யானவுன் முயற்சியா லீட்டினை யதனால்
              உரிமை யானதே கொடுத்திடக் கொடுப்பதா வொப்பித்
              தருவ துண்டெனில் நானுமென் கொடியினைத் தருவேன்.

        21.    என்று நன்மொழி புகன்றிடக் கேகயன் ஏந்தல்
              நன்று நன்றியா னப்படி யேயென்றன் நாட்டை
              இன்றை யேயுன தின்மொழிக் கிளிதனக் கீவேன்
              மன்றல் செய்தெனை வாழ்விப்பா யென்றனன் மன்னன்.

        22.    உறுதி கூறவே கேகயன் சரியென வொத்துப்
              பெறுதி யென்றனன் தசரத னுளமகிழ் பெருகி
              அறுதி யாகவோர் நாட்குறித் தந்தநா ளதனை
              அறைதி யென்றன னின்றையே மணமுர சதனை.

        23.    சோனை வார்குழல் துடியிடைப் பிடிநடைத் துவர்வாய்த்
              தேனை வார்தருங் கிளிமொழி பெருமணத் திருநாள்
              ஏனை நாளல வீரிரு நாளையே யென்று
              யானை மேலணி யாணைமா மணமுர சறைந்தான்.

        24.    முரச றைந்தநன் னாள்வர முதுநக ருள்ளார்
              வரிசை யாகநன் னகரையொப் பனைசெய மணித்தார்
              அரச ரோடுற வேனரும் போந்திய லழகு
              பரிசி தேயென வந்தமர்ந் தார்மணப் பந்தர்.

        25.    பல்லி யங்கறங் கிடமறை யோர்மறை பாட
              வல்லி யைத்திரு மணமக ளாக்கொடு வந்தார்
              மல்ல லந்தொடைத் தசரதன் புதுமண மகனாய்
              நல்லி யன்றில கிடுமண வறையதை நண்ணி.

        26.    செந்த ழற்கரி யாகவுன் றிருவனாள் பெற்ற
              மைந்த னுக்குரித் தாகெனக் கேகயன் மகட்குச்
              சொந்த நாட்டினைப் பரிசமாத் தூயநீர் வார்த்துத்
              தந்து நின்றிடக் கேகயன் தன்மகட் டந்தான்.

        27.    பெரிய னானகே கயன்றரு வரிசையைப் பெற்றே
              அரிவை யோடவன் அயோத்திமா நகரினை யடைந்து
              மருவு மூவரோ டினும்பல மாதரை மருவி
              இருவி சும்பிடை மீன்புணர் மதியென விருந்தான்.
-------------------------------------------------------------------------------------------
        26. கரி - சான்று. 27. புணர்தல் - சூழ்தல்.