பக்கம் எண் :


354புலவர் குழந்தை

   
         6. புலைவி ழைந்து பொருந்திலாக்
           கொலைவி ழைந்த கொடியவர்
           அலைவி ழைந்திட அஞ்சியே
           நிலைவி ழைந்து நிலவினர்.

         7. புன்பு லத்த புலாலுணும்
           துன்பு மிக்க தொழிலிலார்
           அன்பு மிக்க வருந்தமிழ்
           இன்பு மிக்கங் கிருந்தனர்.

         8. அச்ச மின்றி யருந்தமிழ்
           மெச்ச வாய்ந்து விழுத்தகத்
           தச்சன் கைவழி தானெனும்
           ஒச்ச மேயவ ளோர்பகல்.

         9. தோகை மாமயில் சூழ்தரப்
           போகு மானெனப் பூவையும்
           மாக ருங்குயில் வாவெனக்
           கூக மேயினள் கூர்ம்பொழில்.

         10. பொழில டைந்த புனமயில்
           எழில டைந்த வியற்கையின்
           தொழில டைந்தவோர் சூழலின்
           கழல டைந்து களித்தனள்.

         11. கரும்ப வாவுமென் கையினாள்
           சுரும்ப வாவுந் தொடைபெற
           விரும்ப வாவன மேயினார்
           அரும்ப வாவு மமிழ்தனார்.

         12. வேலை வென்ற விழிச்சியர்
           சோலை கண்டு சுரும்பலர்
           மாலை செண்டு வகைவகை
           தோலை மொண்டு தொடுத்தனர்.

         13. பஞ்சின் மெல்லடிப் பாவையர்
           வஞ்சி போல வளைந்திடை
           கொஞ்சு பூவை குயில்கிளை
           அஞ்ச வாய்வரிந் தாடினர்.
-------------------------------------------------------------------------------------------
         6. அலை - அலைத்தல், வருத்தல். 8. ஒச்சம் - நாணம். 12. தோல் - அழகு. 13. கிளை - கிள்ளை - கிளி. வரிந்து - பாடி.