பக்கம் எண் :


இராவண காவியம் 373

   
        41. பொருவிலியை யிளையளொடு போர்மறவர் தம்மை
           அருமையுயிர் கொன்றவட வாரியரை நாளை
           நரிகழுகி னோடுவெறி நாய்க்குதவி டேனேல்
           ஒருதொழிலு மின்றியிரந் துண்பவனு மாவேன்.

        42. மறவர்க ளிலாதுதனி வந்தவிளை யாளை
           அறமல புரிந்தவட வாரியரை நாளை
           திறமிகுசெவ் வேலினுயிர் தீர்க்கிலனே யாகிற்
           பிறர்பொருள்கொ டுண்டுவளர் பேதையனு மாவேன்.

        43. அறமல புரிந்தவட வாரியரை நாளை
           மறவர்மனை யோர்மகிழ வைத்துவதை யேனேல்
           குறளையொடு பொறுமையல கொண்டவரி னொன்றோ
           பிறர்பழி யெடுத்துரைசெய் பீடிலனு மாவேன்.
 
அறுசீர் விருத்தம்
 
        44. இன்னன பலவா றாக வினைந்துவஞ் சினங்கள் கூறி
           மன்னவர் மன்னன் பின்னர் மதிவலி யமைச்ச ரெங்கள்
           கன்னவில் குவவுத் தோளாய் கழிந்ததற் கிரங்கே லென்ன
           என்னினிச் செய்வே னென்ன வியல்வது தெரிந்த வன்னார்.

        45. மறப்படை தம்மா லன்னான் மனைவியைக் கவர்ந்து வந்து
           புறப்பொருட் படியே காவல் புகுத்திநா மோம்பி னந்த
           அறக்கொடும் பாவி யீங்கே யடைகுவ னடையா னாயின்
           துறக்குவன் றமிழ கத்தைத் துன்னிடத் துணியான் பின்னர்.

        46. என்றவர் கூறக் கேட்ட இராவணன் மறவர்ப் போக்கல்
           நன்றல நானே சென்றந் நங்கையை எடுத்து மீள்வேன்
           அன்றவ ரெதிர்க்கி னாவி குடித்திவ ணடைவே னென்ன
           மன்றலந் தாரோய் நானும் வருகிறே னெனமா ரீசன்.

        47. என்னருந் தாயைக் கொன்ற இழிதகை யாள ரான
           துன்னலர் மனையைக் கொள்ளத் துணையது செய்வேன் அன்றி
           அன்னவ ரெதிர்ப்பா ராகில் ஆருயிர்க் கிறுதி காண்பேன்
           என்ன மாரீசன் றன்னோ டெழுந்துதே ரேறிச் சென்றான்.
-------------------------------------------------------------------------------------------
        43. பொறுமையல - பொறாமை.