7. செங்கதிர் போன்ற மேனி திகழொளி சூழப் பெற்ற மங்கல வுருவி னோடு வாய்ந்தகட் டழகு மிக்கான் திங்களி னுருவஞ் சேப்பத் திகழ்கிறா னெனவே முற்றான் செங்கைவே லவனுந் தேரைச் செருக்களஞ் செலுத்தி னானே. 8. மன்னவர் மன்னன் வில்லை வளைத்தடர் மாரி பெய்ய மின்னெனப் பகைவர் தோன்றி வெருகென வெருவுற் றோட முன்னனைக் கரவாற் கொன்று முறையிலா தரசு கொண்ட பின்னனங் கடையக் கண்டே பின்வரு மாறு சொல்வான். | கலி விருத்தம் | 9. உள்ளவா றுரைக்கிறே னொருவர்க் குள்ளதைக் கொள்ளுதல் தீததைக் கொடுத்தல் நன்றதைக் கள்ளமாய்க் கொள்வதிற் கயமை வேறுண்டோ எள்ளுறு பொருளினு மியம்பக் கேட்டியால். 10. அண்ணனைக் கொன்றவ னரசை வவ்வியே உண்ணவு முடுக்கவு முலக மேசவும் புண்ணுடை நெஞ்சொடு புலம்பி வாழ்தலின் மண்ணிடை மண்ணென மடிதல் தீமையோ. 11. அன்னதும் பகைவனுக் கடிமை யாகியோ புன்னெறி யான்முடி புனைத லன்றியும் என்னையுங் கொல்லுதற் கியைந்த வெம்பியோ டுன்னையும் பெற்றவ ருறுதி பெற்றரே. 12. ஐயன்மீ ரிருவருந் தமிழ ராய்குலத் துய்யரா யெப்படித் தோன்றி னீர்களோ கையிலா காதநீர் காலைக் கும்பிட்டுச் செய்யவேண் டியதினைத் தெளியச் சொல்லுவீர். 13. வண்டமிழ் மக்கள்தன் மான மென்பதை உண்டியி னன்றுதம் முயிரின் மேலதாக் கொண்டவ ருங்களைக் குறித்த மட்டிலும் விண்டவ ரென்பதை விளக்கிக் கொண்டனிர். 14. மன்னுயி ரேகினும் மான மென்பதைப் புன்னுனி யாயினும் போக்கற் குட்படாத் தென்னவர் மரபினிற் சிறுமைக் கஞ்சிடா மன்னவ ரிருவரும் வந்து தோன்றினீர். ------------------------------------------------------------------------------------------- 7. ஏமுறுதல் - மகிழ்தல், வருந்துதல், மயங்குதல். 8. வெருகு - பூனை. கரவு - வஞ்சனை. | |
|
|