பக்கம் எண் :


இராவண காவியம் 503

   
        15.   எப்படி யோதமி ழினத்தில் வந்துமே
             தப்பியே பிறந்தனிர் தமிழர் வீழ்வினைப்
             பப்பியே வருங்குலப் பகைவர் காலினில்
             தொப்பென விழுந்தெழுந் தொழும்பர் நீவிரே.

        16.   அரசெனப் படுவது மரச வாழ்வதும்
             உரைசெயின் மக்களுக் குதவி செய்வதே
             அரசனைப் போக்கியவ் வரசு பெற்றநீ
             கரிசனத் தொடுசெயுங் கடமை யென்னவோ.

        17.   ஆரியக் கோடரிக் கான காம்பதாக்
             காரியப் படுமுதற் கயவ னேயினச்
             சீரிய தமிழ்மரஞ் சிதைய வெட்டிடும்
             பூரிய வுன்னுயிர் போக்கு வேனிதோ.

        18.   இன்னன வுரைத்திட வேதும் பேசிலா
             துன்னிய கருத்திலா வூம னாகியே
             வெந்நிடு வானென வில்லை வாங்கியே
             இன்னெனக் கணைதொட விறைவன் சீறியே.
 
அறுசீர் விருத்தம்
 
        19.   அடித்தவன் றன்னை வீழ்த்தி யரமியன் முதலோ ராவி
             துடித்திட வடித்து வீழ்த்தித் தொகைபட நூறி யார்ப்ப
             எடுத்தவர் தம்மை மள்ளர் ஏகியே ராமன் முன்னர்
             விடுத்தன ரவனுஞ் சீறி விரைந்தெழ மறித்துப் பின்னோன்.

        20.   எம்பியா னிருக்க வில்லை யெடுப்பது தகுதி யோமான்
             கும்பலில் விரைந்து பாயுங் கோளரி யென்னப் பாய்ந்தே
             தம்பலந் தின்னற் கெண்ணுந் தமிழரைத் தனிய னாயவ்
             வம்பனோ டோட்டி யீதோ வருகிறே னென்று கூறி.

        21.   சென்றுமே யெதிர்க்க மேலோன் செங்கதிர் வேலாற் றாக்கப்
             பொன்றிலன் மயங்கி மண்மேற் பொருக்கென வீழ்ந்தா னாங்கு
             நின்றனு மனுங்கொண் டேகி நீள்சிலை யவன்முன் சேர்ப்பக்
             கன்றிய வவனுஞ் சென்று கடிதினி லிளைத்து மீண்டான்.
-------------------------------------------------------------------------------------------
        15. பப்புதல் - ஒப்புதல். தொழும்பர் - அடிமைகள். 19. அரமியன் - ஆரியப் படைத் தலைவன்.