பக்கம் எண் :


554புலவர் குழந்தை

   
       3.  இந்த வூர்க்கிணை யுலகினி லெங்குமே யியன்ற
          எந்த வூர்களு மிருப்பதாக் கேட்டிலே னெமது
          சொந்த வூருமே யிந்தவூர்க் கிணையுறத் தோற்கின்
          இந்த வூர்க்கிணை பேசுத லெவ்வகை யியலும்.

       4.  மனையின் காப்பெனக் கூறிடத் திகழ்புற மதிலைப்
          பனிம லைத்திர ளென்னினுங் குறையெனப் படுமால்
          பனிம லைக்கிலா வலிமையும் பொருண்மையும் பகைவர்
          வினையை யோட்டிடும் படைகளு மிதற்குள மிகையே.

       5.  மதிலை முற்றியே யறிவிலே னென்படை வலியைச்
          சிதற விட்டன னம்மதிற் கிடங்கினைத் தேரின்
          சிதலை யாலினைத் தின்றுவீழ்த் துவதுபோற் செறியும்
          முதலை யாளினை வீ்ழ்த்தியே கவிழ்த்ததெம் மொய்ம்பே.

       6.  தமிழர் மாபெருந் தலைவன்வீற் றிருந்தவத் தாணி
          தமிழர் வாழ்வினற் பெருமையை விளக்கவோர் சான்றாம்
          கமழு மூரகச் சோலையை யுண்மையிற் காணின்
          உமிழு மாய்கதிர் மணிவிளை பொழிலென்ப தொன்றே.

       7.  நினைமுன் றொன்னக ருளவெலாங் கூறிட நீயும்
          அனுமன் சொற்படி யாங்குவந் தில்லையே யாயின்
          இனுமென் னாட்டின ரோடுவன் றமிழர்க ளெல்லாம்
          எனைமுன் சேர்ந்திருந் தாலுமா டெய்துத லின்றே.

       8.  இன்னு முள்ளவிவ் விலங்கையின் பெருமையை யெல்லாம்
          இன்ன வாறெனத் தனித்தனி யாகவே யெடுத்துப்
          பன்ன வென்றனா லாவதோ பழந்தமிழ் மக்கள்
          மன்னர் மன்னனா வந்தவுன் வாழ்வதே வாழ்வு.

       9.  என்று கூறியே காண்டகு தொன்னக ரெங்கும்
          சென்று கண்களி கொள்ளவே கண்டனர் சென்று
          ஒன்று பொன்மணி குயின்றவத் தாணியை யுற்றுக்
          கொன்ற பாவிய ரிருக்கையி லமரவே கொடியோன்.

       10. ஏழை தன்னையு மோர்பொரு ளாகவே யெண்ணி
          வாழை நேரடி வாழையா யிறைபெற வந்த
          மாழை மாமணி யிருக்கையில் வாழ்ந்திட வைத்த
          வீழை நேருமிந் நன்றியை வீயினு மறக்கேன்.
--------------------------------------------------------------------------------------
       5. சிதலை - கறையான். மொய்ம்பு - வலி. 7. முன் உளவும், தொன்னகர் உளவும். முன் - அண்ணன். ஆடு - வெற்றி. 9. குயின்ற - செய்த கொடியோன் - பீடணன். 10. மாழை - பொன். வீழ் - விழுது.