பக்கம் எண் :

பக்கம் எண் :87

Manimegalai-Book Content
6. சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை
 

தோற்றம்போல - தோன்றுமிடத்து விளங்குமியல்பினைப்போல, மாசு அறு விசும்பில் மறுநிறம் கிளர - விசும்பின்கண் மாசற்ற நிறத்தினிடம் களங்கம் விளங்க, ஆசு அற விளங்கிய அம்தீம் தண் கதிர்-குற்றமற்று விளங்குகின்ற அழகிய தீவிய குளிர்ந்த கதிரினை, வெள்ளி வெண்குடத்துப் பால் சொரிவதுபோல் - வெள்ளிக் குடத்தினின்று பாலைச் செரிவதுபோல, கள்அவிழ் பூம்பொழில் இடையிடை சொரிய - தேன் அவிழுகின்ற மலர்ச்சோலையில் இடையிடையே பொழிய;

அந்திமாலை-அந்தியாகிய மாலை. தோன்றுவழி விளங்கும் என்றது சான்றோர்பால் குற்றம் உண்டாய அப்பொழுதே அது யாவரும் அறிய வெளிப்படும் என்றவாறாம்; அவர் வெளிப்படுமிடத்து அதுவும் வெளிப்படும் என்றுமாம: திங்கள் தூய்மை உடையதாகலானும் அதன்கண் களங்கம் அதற்கு மாறாக இருத்தலானும் அது விளங்கித் தோன்றிற்று. 1"குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின், மதிக்கண் மறுப்போ லுயர்ந்து" என்பதனாற் சான்றோரிடைக் குற்றம் யாவருமறிய நிற்றல் காண்க. ஈண்டுப் பொருள் உவமமாக்கப்பட்டது; என்னை? 2பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினும், மருளறு சிறப்பினஃ துவம மாகும்" என்பவாகலான். சான்றோர் குற்றம் விளங்குந் தோற்றம்போலக் கதிர் மண்டிலம் மறுநிறங் கிளரத் தண் கதிரைப் பால் சொரிவதுபோல் இடையிடைச் சொரிய வென்க. திங்களுக்கு வெள்ளிக்குடமும் தண்கதிர்க்குப் பாலும் உவமை.

1--15 உருவு கொண்ட மின்னே போல-பெண்ணுருவங்கொண்ட மின்னலைப் போலவும், திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள் - இந்திர வில்லைப்போலவும ஒளிவிட்டு விளங்குகின்ற திருமேனியை யுடைய அத்தெய்வம், ஆதிமுதல்வன் அறவாழி ஆள்வோன் பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி - அறவாழியினை உருட்டுகின்ற ஆதி முதல்வனது பாதபீடிகையை வணங்கித் துதித்து, பதியகத்து உறையும் ஓர் பைந்தொடியாகி-அப் பதியிலுறைகின்ற ஒரு பெண் வடிவுகொண்டு, சுதமதி நல்லாள் தன்முகம் நோக்கி - சுதமிதியின் முகத்தை நோக்கி, ஈங்கு நின்றீர்என் உற்றீர் என-ஈண்டு நிற்கின்றவர்களே நீவிர் அடைந்த துன்பம் யாது என வினவ;

உருவு கொண்ட மின்:இல்பொருளுவமை. மின்போலவும் திருவில் போலவும் என்க. திருவில் - வானவில். 3 திருவி லிட்டுத் திகழ்தரு மேனியன்" என வருதல் காண்க. கடவுளர் இன்ன காலத்து இவ்வாறு தோன்றுவர் என்பது புலப்படாமையான், அங்ஙனம் தோன்றும் வானவில் அவர்க்கு உவமையாயிற்று. திருவில் - அழகிய ஒளியென்றுமாம். ஆதி முதல்வன் - புத்தன். அறவாழி - அறமாகிய திகிரி. பாதபீடிகை- புத்ததேவன் திருவடி யமைந்த பீடம்; உவவனத்திற் பளிக்கறையில்


1 குறள். 957.    2 தொல். பொருளதி. 284.    3 சிலப். 15:156.