பக்கம் எண் :

பக்கம் எண் :91

Manimegalai-Book Content
6. சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை

ஈமப்பந்தரும் யாங்கணும் பரந்து - ஈமத்தில் இட்ட பந்தர்களும் எவ்விடத்தும் பரக்கப்பெற்று ;

கந்தின்கண் தெய்வமுறைதலை 1"கலிகெழு கடவுள் கந்தங் கைவிட" என்பதனானும் அறிக. மிறை - வளைவு ; 2மிறைக்கொளி திருத்தினானே" என்றார் பிறரும். மண்டை-உண்டற்குரிய மண்கலம் ; இரக்குங் கலமுமாம் ; 3;"ஏலாது கவிழ்ந்த என் இரவன் மண்டை" என்பது புறம். குடிகை-குடிசை. சுடர்-தீக்கொழுந்து; விளக்குமாம்.

66-9. சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர் - பிணங்களைச் சுடுவோரும் வாளா இட்டுப்போவோரும் தோண்டப்பட்ட குழியிலிடுவோரும், தாழ்வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர் - தாழ்ந்த இடங்களில் அடைத்து வைப்போரும் தாழியினாலே கவிப்போரும், இரவும் பகலும் இளிவுடன் தரியாது - இரவும் பகலும் அருவருப்புடன் தங்காமல், வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும் -வருவோரும் போவோரு மாகியவர்களின் நீங்காத ஒலியும் ;

 தாழ்வயின் - பள்ளமாகிய இடம். தாழியிற் கவித்தலைப் புற நானூற்றின் 227, 237, 255, 363-ஆம் செய்யுட்களால் அறிக. இது முழுமக்கட் டாழி எனப்படும். சுடுவோர் முதலியோராய் வருவோர் பெயர்வோர் என்க.

70--9. எஞ்சியோர் மருங்கின் ஈமஞ்சாற்றி நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும்-உயிர் வாழ்ந்திருப்போரிடம் ஈமம் உண்டென்பதைக் கூறி உள்ளம் நடுங்குமாறு புரியும் நெய்தற்பறையின் ஒலியும், துறவோர் இறந்த தொழுவிளிப் பூசலும்-துறவியர் இறந்ததனாற் போந்த துதிமுழக்கமும், பிறவோர் இறந்த அழுவிளிப் பூசலும்-இல்லறத்தோர் இறந்ததனாலாகிய அழுகை யொலியும், நீள்முக நரியின் தீவிளிக்கூவும்-நீண்ட முகத்தையுடைய நரியின் தீய ஒலியினையுடைய கூப்பீடும். சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்-இறப்போரை யழைக்கும் பேராந்தையின் குரலும், புலவூண் பொருந்திய குராலின் குரலும் - புலாலாகிய உணவைப் பொருந்திய கோட்டானின் ஒலியும், ஊண்தலை துற்றிய ஆண்டலைக் குரலும் - உணவாகத் தலை முளையைக் கடித்துண்ட ஆண்டலைப் பறவையின் முழக்கமும், நன்னீர்ப் புணரி நளிகடல் ஒதையின் இன்னா இசைஒலி என்றும் நின்று அறாது-தூநீர்ச் சேர்க்கை யினையுடைய செறிந்த கடல் ஓசையைப்போல் இன்னாதனவாகிய முழக்கம் என்றும் நின்று நீங்காமல் ;

நெய்தல் - சாப்பறை ; அஃது ஈமஞ்சாற்றுதலை 4"மணங்கொண்டீண், டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே, தொண்டொண்டொண் ணென்னும் பறை" என்பதனாலுமறிக. முன் துறவோர் என்றமையின் பிறவோர் இல்லறத்தாராயிற்று. தொழுவிளியாகிய


1 புறம். 52.    2 சீவக-284.     3 புறம். 189.     4 நாலடி. 25.