பக்கம் எண் :

பக்கம் எண் :94

Manimegalai-Book Content
6. சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை

கிடந்த புழுவூன் பிண்டத்து - வழுவுடன் கிடந்த புழுக்கள் மலிந்த ஊன் பிண்டமாகிய உடலில் ;

அன்புறு மாக்கள்-உடம்பினிடத்து அன்புமிக்க மாக்கள் ; மாக்கள் என்றார் ஐம்புல வுணர்ச்சியன்றி மனவுணர்ச்சி யில்லாதவர் எனற்கு, வழு - வழும்பு. யாக்கை என்பது என்பு முதலியனவே யென மாக்கட்குச் சாற்றிக்கிடந்த பிண்டம் என்க ;

1"குடருங் கொழுவுங் குருதியு மென்பும்
தொடரு நரம்பொடு தோலும்--இடையிடையே
வைத்த தடியும் வழும்புமா மற்றிவற்றுள்
எத்திறத்தா ளீர்ங்கோதை யாள்."

என்பது ஒத்து நோக்கற்பாலது.

110-19. அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய்க்கொண்டு - செம் பஞ்சுக் குழம்பு ஊட்டப்பெற்ற அடிகளை நரி வாயிலே கவ்விக் கொண்டு, உலப்பில் இன்பமோடு உளைக்கும் ஓதையும் - கேடில்லாத இன்பத்துடன் ஊளையிடுகின்ற ஒலியும், கலைப்புற அல்குல் கழுகு குடைந்துண்டு நிலத்தலை நெடுவிளி எடுக்கும் ஓதையும் - கலையை யொழித்த அல்குலைக் கழுகு குடைந்து உண்டு நிலத்தின் கண் பெரிய கூவுதலைச் செய்யும் ஓசையும், கடகம் செறிந்த கையைத் தீ நாய் உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும்-கடகமணிந்த கையைத் தீய நாய் உடையுமாறு கவ்விக்கொண்டு இடும் ஒடுங்காத முழக்கமும், சாந்தம் தோய்ந்த ஏந்திள வனமுலை - சந்தனம் பூசப்பெற்ற நிமிர்ந்த இளங் கொங்கையை, காய்ந்த பசி எருவை கவர்ந்தூண் ஓதையும்-மிக்க பசியையுடைய பருந்து கவர்ந்துண்ணுகின்ற ஓசையும், பண்புகொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து- இனிமையுடைய உடல்கள் வெந்த சாம்பற் குவையாகிய அரங்கில், மண்கணை முழவம் ஆக - மார்ச்சனை செறிந்த தண்ணுமை முழக்கமாக ;

கலை - உடை ; மேகலையுமாம். நிலைத்தலை என்பது பாடமாயின் தன்னிடத்து நிலைபெற்ற என்க. தீ நாய் - புறங்காட்டிற் றிரியும் ஒரு வகை நாயுமாம். பண்பு - இனிமை ; அழகுமாம். ஓதை பலவும் முழவமாக வென்க.

119-21. ஆங்கு ஓர் கருந்தலை வாங்கிக் கையகத்து ஏந்தி - அங்குள்ள ஓர் பெண்பிணத்தின் கரிய தலையைப் பறித்துக் கையிலே ஏந்தி, இரும்பேர் உவகையின் எழுந்து ஓர் பேய்மகள்-ஓர் பெண் பேய் மிக்க பெரிய மகிழ்ச்சியுடன் எழுந்து ;

122-6. புயலோ குழலோ-முகிலோ அன்றிக் கூந்தலோ, கயலோ கண்ணோ - கயல் மீனோ அன்றிக் கண்ணோ, குமிழோ மூக்கோ -


1 நாலடி. 46.