பக்கம் எண் :

பக்கம் எண் :106

::TVU::
7. துயிலெழுப்பிய காதை

உரை

1--7.    மணிமேகலைதனை மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி-மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத்தின்கண் வைத்து அதனைவிட்டு நீங்க, மணிமேகலைதனை மலர்ப்பொழிற் கண்ட உதயகுமரன் - மணிமேகலையைப் பூஞ்சோலையிற் கண்ட உதயகுமரன், உறுதுயர் எய்தி - மிக்க துன்ப முற்று, கங்குல் கழியில்என் கையகத்தாள் என - இரவு நீங்கினால் மணிமேகலை என் கையினிடத்தே உள்ளாள் என்று, பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன் முன்னர்த் தோன்றி- சிறந்த மெல்லிய படுக்கையிடத்துக் கண்டுயிலாது இருக்கின்றவன் முன்னே தோன்றி,

மணிமேகலையை எய்தப் பெறாமையான் உறுதுயர் எய்தினான் என்க. பொருந்தாது-கண் பொருந்தாது : உறங்காது. இருந்தோன் முன்னர்த் தோன்றி என்க.

7--14,    மன்னவன் மகனே-அரசன் புதல்வனே, கோல் நிலை திரிந்தி டின் கோள் நிலை திரியும்-அரசனது கோல் கோடுவதாயின் கோட் களின் நிலை வேறுபடும், கோள்நிலை திரிந்திடின் மாரி வறம்கூரும்- அங்ஙனம் கோட்கள் நிலை தவறினால் மழை பொய்யாமற் கழியுங்காலம் மிகும், மாரி வறங் கூரின் மன்னுயிர் இல்லை - மழை வளங் குறைந்தால் நிலைபெற்ற உயிர்கள் இல்லையாம், மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன் தன்உயிர் என்னும் தகுதி இன்று ஆகும்- நிலைபெற்ற உயிர்கள் அனைத்தும் மண்ணுலகத்தை ஆள்கின்ற மன்னவனது உயிர்என்று கூறப்படும் தகைமைஇலதாம் ஆகலின், தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த - தவத்தின் கூறுபாட்டினை மேற்கொண்ட மணிமேகலைபால் வைத்த, அவத்திறம் ஒழி கென்று அவன் வயின் உரைத்தபின்-தீய விருப்பின் தன்மையை ஒழிவாயாக என்று உதயகுமரனிடம் மொழிந்த பின்னர் ;

கோல்நிலை திரியின் கொள்நிலை திரிதல் முதலியன நிகழுமென் பதனை, 1 "கோணிலை திரியாக் கோலோ னாகுக,'' 2 "கோணிலைதிரிந்து நாழி குறைபடக் பகல்கண் மிஞ்சி, நீணில மாரி யின்றி விளைவஃகிப் பசியு நீடிப், பூண்முலை மகளிர் பொற்பிற் கற்பழிந் தறங்கண் மாறி, ஆணையிவ் வுலகு கேடா மரசுகோல் கோடி னென்றான்" என்பவற்றானும் அறிக. அவத்திறம் - கேடு செய்யும் தீய விழைவு.

15--22.    உவவனம் புகுந்து ஆங்கு உறுதுயில் கொள்ளும்-உவவனத்திற் புகுந்து ஆண்டு மிகுந்த உறக்கத்துடனிருக்கும், சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி - சுதமதியை உறக்கத்தினின்றும் எழுப்பி, இந்திரகோடனை இந்நகர்க் காண வந்தேன் அஞ்சல்


1 மணி. 1 : 34. 2 சீவ. 1 : 255.