பக்கம் எண் :

பக்கம் எண் :109

::TVU::
7. துயிலெழுப்பிய காதை

பண்பு - ஈண்டு அன்பு. பரத்தமை-பரத்தன் தன்மை;பரத்தையை மருவி யொழுகுவோன் பரத்தன்; 1 "பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர், நண்ணேன் பரத்தநின் மார்பு" என்பது காண்க. ஊடலொடு துயில்வோர் தாமே துணையைத் தழுவவு மென்க.

54--59.   தளர்நடை ஆயமொடு தங்காது ஓடி விளையாடு சிறுதேர் ஈர்த்து மெய்வருந்தி - தளர்நடைச் சிறார்களுடன் ஓரிடத்தில் தங்காமல் ஓடி விளையாடுஞ் சிறு தேரினை இழுத்து உடல்வருந்தி, அமளித் துஞ்சும்-படுக்கையில் உறங்குகின்ற, ஜம்படைத் தாலிக் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்கு - ஜம்படைத் தாலி யணிந்த மார்பும் மழலைச் செவ்வாயும் தளர்நடையுமுடைய இளம் புதல்வர்க்கு, காவற்பெண்டிர் கடிப்பகை எறிந்து தூபம் காட்டித் தூங்கு துயில் வதியவும் - செவிலித்தாயர் கடிப்பகை வீசிப் புகை காட்டித் தூங்குகின்ற உறக்கத்திற் பொருந்தவும்;

ஐம்படை - திருமாலின் பஞ்சாயுத வடிவமுடைய அணிகலன் ; "சிந்துபு சின்னீ ரைம்படை நனைப்ப" (3; 138) என்புழி உரைத்தமை நோக்குக. கடிப்பகை - பேய்க்குப் பகை ; வேம்பும், வெண்சிறு கடுகும்; இக் காதையுள் மேல்வருதல் காண்க. காவற்பெண்டிர் துயில் வதியவும் என்க.

60--63.   இறையுறை புறவும் நிறைநீர்ப் புள்ளும் - இறப்புகளில் வாழ் கின்ற புறாக்களும் நிறைந்த நீரிலுள்ள பறவைகளும், கா உறை பறவைகளும நா உள் அழுந்தி-பொழில்களில் உறைகின்ற புட்களும் நா உள்ளே அழுந்தி, விழவுக்களி அடங்கி முழவுக்கண் துயின்று- விழாவினாலுண்டாகிய களிப்பு அடங்கி முழவுகளின் கண் துயின்று, பழவிறல் மூதூர் பாயல் கொள் நடுநாள் - பழைய வலி யினையுடைய தொன்னகரம் துயிலினைக்கொண்ட இடையா மத்தில்;

நாவுள்ளழுந்தலாவது : ஒலியாதிருத்தல். அழுந்தி, அடங்கி, துயின்று என்னும் இடத்து நிகழ்பொருளின் றொழில்கள் இடத்தின் மேல் நின்றன ; அழுந்தி முதலியவற்றைச் செயவனெச்சமாகத்
திரித்தலுமாம்.

64--65.   கோமகன் கோயில் குறுநீர்க் கன்னலின் - அரசன் மாளிகையில் குறிய நீரினைக் கொண்ட நாழிகை வட்டிலால், யாமம் கொள்பவர் ஏத்துஒலி அரவமும்-நாழிகைக் கணக்கிடுவோர் ஏத்துகின்ற ஒலியாகிய முழக்கமும்;

அரசனை ஏத்தி நாழிகை கூறுவராகலின் ''ஏத்தொலியரவமும்'' என்றார். ஒலியாகிய அரவமென்க ; அரவம் தமிழ்ச்சொல்லே.


1 குறள். 1311.