அனைவருக்கும் வியப்பை யுண்டுபண்ணும் பாவையானது, மைத்தடங் கண்ணாள்
மயங்கினள் வெருவ-சுதமதி அஞ்சி மயங்குமாறு, திப்பியம் உரைக்கும்
தெய்வக் கிளவியின் - எதிர்காலத்தில் நிகழ் வனவற்றையும் கூறும்
திப்பியமாகிய தெய்வக் கிளவியினாலே ;
நெடுநிலை யுடைக் கந்தாகிய அந்தில் எனக்
கூட்டுக. அந்தில்-ஆங் கென்னும் பொருட்டு. காட்டிய : செய்யியவென்னும்
வினையெச்சம். வருவதனை உரைப்பது தெய்வத் தன்மையாம் என்று கொண்டு
''திப்பிய முரைக்கும்'' என்றார். தெய்வக்கிளவி - தெய்வத்தின்
மொழி.
98--105. இரவிவன்மன் ஒரு பெருமகளே
- அசோதர நகரத்தரசனாகிய இரவிவன்மனது ஒரு பெருமகளே, துரகத் தானைத்
துச்சயன்தேவி - குதிரைச் சேனைகளை யுடையனும் கச்சய நகரத் தரசனுமாகிய
துச்சயனுடைய மனைவியே, தயங்கு இணர்க்கோதை தாரை சாவுற-விளங்குகின்ற
பூங்கொத்தினாலாய மாலையையுடைய தாரை இறக்குமாறு, மயங்கி யானைமுன்
மன்னுயிர் நீத்தோய்- யானையின் முன்னே மயங்கி உயிர் துறந்தோய்,
காராளர் சண்பையில் கௌசிகன் மகளே - காராளருடைய சண்பை நகரத்தில்
உள்ள கௌசிகன் என்பவனுடைய புதல்வியே, மாருதவேகனோடு இந்நகர்
புகுந்து - மாருதவேகன் என்னும் விஞ்சையனுடன் இந் நகரத்திற் சேர்ந்து,
தாரை தவ்வை தன்னொடு கூடிய - தமக்கை யாகிய தாரையுடன் கூடிய, வீரையாகிய
சுதமதி கேளாய் - வீரை யாகிய சுதமதியே கேட்பாயாக ;
இரவின்மன் - சுதமதியின்
முற்பிறப்பிலே தந்தையாயிருந்தவன். துச்சயன் - சுதமதியின் முற்பிறப்பிற்
கணவனாயிருந்தவன். தாரை- சுதமதியின் முற்பிறப்பின் தமக்கையாயிருந்தவள்.
வீரை யானையால் இறந்தது கேட்டு இவள் இறந்தமையால் ''தாரை சாவுற''
என்றாள் ; சாவுற : எதிர்காலத்தில் வந்தது. காராளர் - வேளாளர்
; சண்பை - சீகாழி ; சண்பை யென்பது அங்கநாட்டிற் கங்கைக் கரையிலுள்ளதாகிய சம்பா நகரம் என்றும், காராளர் என்பது கராளர் என்பதன்
திரிபென்றும் கூறுவாருமுளர் ; தாரை, வீரை, இலக்குமி என்னும் மூன்று
சகோதரிகளுள், தாரை மாதவியாகவும், இலக்குமி மணிமேகலை யாகவும்
காவிரிப்பூம் பட்டினத்திற் பிறந்திருத்தலானும், இந்திரவிழாக்
காண்டற்கு வந்த மாருதவேகன் என்னும் விஞ்சையன் தான் பூக் கொய்யும்பொழுது
தன்னை எடுத்தேகினனென்று மேல் (3:28-39) சுதமதி கூறுதலானும் புகார்
நகருக்கு அணித்தாகிய சீகாழியென்று கொள்வதே பொருத்தமாம். கௌசிகன்
- சுதமதியின் தந்தை.
106--110.
இன்றேழ் நாளில் இடையிருள் யாமத்து - இற்றைக்கு ஏழாவது நாளில்
இருளையுடைய இடையாமத்தில்தன் பிறப்பதனொடு நின் பிறப்பு உணர்ந்து
ஈங்கு இலக்குமியாகிய நினக்கு