பக்கம் எண் :

பக்கம் எண் :120

::TVU::
8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை
 
கூட்டுக. உருப்ப - முதிர; வெகுள என்றுமாம். ஓகாரம் புலம்பலில் வந்தது.

44-53.   விரிந்து இலங்கு அவிர்ஒளி சிறந்து - விரிந்து விளங்குகின்ற பேரொளி மிக்கு, கதிர்பரப்பி-கிரணங்களை விரித்து, உரை பெறு மும்முழம் நிலமிசை ஓங்கி - புகழமைந்த நிலத்தின்மீது மூன்று முழ அளவினுக்கு உயர்ந்து, திசைதொறும் ஒன்பான் முழநிலம் அகன்று-நாற்றிசையிலும் ஒன்பதுமுழ அளவினையுடைய இடம் அகன்று, விதிமாண் ஆடியின் வட்டம் குயின்று -விதி மாட்சிமைப்பட்ட பளிங்கினால் வட்டஞ் செய்யப்பட்டு, பதும சதுரம் மீமிசை விளங்கி-பதுமத்தையுடைய சதுரம் மேலிடத்தில் விளங்கப்பெற்று, அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே-புத்தனுக்கு அமைந்த ஆதனம் என்று, நறுமலர் அல்லது பிற மரஞ் சொரியாது - மரங்கள் நறுமலர்களை அன்றி வேறொன்றையும் சொரியா, பறவையும் முதிர்சிறை பாங்கு சென்று அதிராது - பறவைகளும் அப்பீடிகையின் பக்கத்திற் சென்று சிறையொலி செய்யா, தேவர்கோன் இட்ட மாமணிப்பீடிகை - இந்திரனாலிடப்பட்ட பெருமை பொருந்திய மணிகளானாய பீடிகை, பிறப்பு விளங்கு அறத்தகை ஆசனம்-காண்போரது பழம் பிறப்பு விளங்குதற்கு ஏதுவாகிய ஒளி பொருந்திய அறத்தினியல்புடைய ஆசனம்;

சிறந்து பரப்பி ஓங்கி அகன்று குயின்று விளங்கி அமைந்த ஆசனம் என்க. விதி - செய்கை. பதுமம் - புத்தன் பாதமும் ஆம். மீமிசை, ஒரு பொருட் பன்மொழி. மரம் பிற சொரியாது, பறவை சிறை அதிராது, அவ்வாறாகத் தேவர் கோன் இட்ட பீடிகையென விரிக்க.

54-63.   கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும் - கீழ்த் திசைக்கண் உள்ள நாக நாட்டினை ஆளும். இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி-மன்னவர் இருவர் ஒருங்கு தோன்றி, எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார் தம் பெரும் பற்று நீங்கலு நீங்கார் - இஃது எம் முடையது எம்முடையது என்று கூறி எடுக்கவும் இயலாதவர்களாய்த் தம்முடைய பெரிய விருப்பம நீங்குதலையும் செய்யாதவர்களாய், செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்து-சிவந்த கண்கள் சினத்தாற் சிவந்து மனங்கொதித்து, தம் பெரும் சேனையோடு வெஞ்சமம் புரிநாள்-தம்முடைய பெருஞ் சேனைகளுடம் கொடிய போர் புரியுநாளில், இருஞ்செரு ஒழிமின் எமது ஈது என்றே ; நீவீர் நுமது பெரிய போரை நீங்குமின் இஃது எம்முடையது என்று கூறி, பெருந்தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும் - பெரிய தவமுனிவனாகிய புத்தன் இருந்து அறம் உரைத்த, பொருவறு சிறப்பில் புரையோர் ஏத்தும்-ஒப்பற்ற சிறப்பினையுடைய உயர்ந்தோர்கள் துதிக்கின்ற, தரும பீடிகை தோன்றியது ஆங்கென் - தரும பீடிகை அவ்விடத்தில் தோன்றியது என்க.