பக்கம் எண் :

பக்கம் எண் :134

Manimegalai-Book Content
10. மந்திரங் கொடுத்த காதை
 

உரை

1--5.  அறவோன் ஆசனத்து ஆயிழை அறிந்த பிறவியள் ஆயினள் - மணிமேகலை புத்தனது பாத பீடிகையால் அறியப்பட்ட பிறவியை உடையளாயினாள், பெற்றியும் ஐது என - இவள் பெற்ற பேறும் அழகிது என்று, விரைமலர் ஏந்தி விசும்பூடு இழிந்து - மணம் பொருந்திய மலர்களை ஏந்தி விசும்பினின்றும் இறங்கி, பொருவறு பூங்கொடி பூமியில் பொலிந்தென - ஒப்பற்ற பூங்கொடியானது பூமியின்கண் பொலிவு பெற்றாற்போல, வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம்--;
 

அறிந்த பிறவியள் - முற்பிறப்பை யறிந்தவள் என்க. பெற்றி - பேறு; 1 "பிணிப்பறுத் தோர்தம் பெற்றி யெய்தவும்" என்பதிற்போல. பூங்கொடி ஏந்தி இழிந்து பொலிந்தெனத் தோன்றிய தெய்வ மென்க.

6--12. முந்தைப் பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப - முற்பிறப்பினையறிந்து நின்ற மணிமேகலை கேட்க, உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி-உயிர்கள் யாவும் உணர்வு பாழடைந்து, பொருள் வழங்கு செவித்துளை தூர்ந்து-அறம் வழங்குதற்குரிய செவிகளின் துளை அதனைக் கேளாது தூர்ந்து, அறிவு இழந்த வறந்தலை உலகத்து - அறிவினை யிழந்த வறுமையைத் தன்னிடத்தே உள்ள உலகின்கண் அறம் பாடு சிறக்க - அறத்தின் கூறுபாடுகள் சிறப்படையுமாறு, சுடர்வழக்கு அற்றுத் தடுமாறு காலை ஓர் இளவள ஞாயிறு தோன்றியது என்ன - ஒளி வழங்குதலின்றித் தடுமாறுகின்ற பொழுதில் ஓர் அழகிய இளம் பரிதி தோன்றியதுபோல, நீயோ தோன்றினை நின் அடிபணிந்தேன்-நீயோ உதித்தருளினை நின் திருவடிகளைப் பணிந்தேன் ;

பொருள் - உறுதிப்பொருள் ; ஈண்டு அறம்; 2 "பொருணீங்கிப் பொச்சாந்தார்" என்புழிப் பரிமேலழகர் உரைத்தமை காண்க அறிவிழந்த வறந்தலை யுலகம் - அறிவின்மையாகிய வறுமையையுடைய உலக என்க. அறம்பாடு என்பதற்கு அறத்தின் தோற்றம் என்றும், சுடர் என்பதற்கு ஞாயிறு என்றும் கூறுதலுமாம்.

12--6. நீயே ஆகி நிற்கு அமைந்த இவ் வாசனம்-நீயே யாகி நினக்கு அமைந்த இப் பீடிகையை, நாமிசை வைத்தேன் தலைமிசைக் கோண்டேன் - நாவாற்றுதித்தேன் தலையால் வணங்கினேன், பூமிசை ஏற்றினேன் - உள்ளத் தாமரையின்மீது இருத்தினேன். புலம்பு அறுக என்று - என் வருத்தம் நீங்குக என்று கூறி, வலங் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர் - பீடிகையை வலங் கொண்டு பணிகின்ற மணிமேகலா தெய்வத்தின் முன்னே;


1 சில்ப். 15 :100.2 குறள். 246.