பக்கம் எண் :

பக்கம் எண் :137

Manimegalai-Book Content
10. மந்திரங் கொடுத்த காதை
 

42--9. உவவன மருங்கில் உன்பால் தோன்றிய உதயகுமரன் அவன் உன் இராகுலன் - உவவனத்தில் நின்னிடம் வந்த உதயகுமரனாகிய அவனே நின் கணவன் இராகுலன், ஆங்கவன் அன்றியும் அவன்பால் உள்ளம் நீங்காத் தன்மை நினக்கும் உண்டாகலின் - அவ் வுதயகுமரன் நின்பால் நீங்காத விருப்பதைச் செலுத்துவதன்றியும் அவனிடஞ் சென்ற உள்ளம் நீங்காததன்மை நினக்கும் உள்ளமையால், கந்தசாலியின் கழிபெருவித்து-கந்தசாலி என்னும் நெல்லின் மிகச் சிறந்த விதை, வெந்து உகு வெண்களர் வீழ்வது போன்ம் என - வெந்து உருகுகின்ற வெள்ளிய உப்பு நிலத்தில் வீழ்கின்றதுபோலும் என்று, அறத்தின் வித்தாங்கு ஆகிய உன்னை ஓர் திறப்படற்கு ஏதுவாச் சேயிழை செய்தேன் - சேயிழாய் அறத்தின் விதையாகிய நின்னை மனம் ஒரு வழிப்படுதற்குக் காரணமாகச்செய்தேன் ;

குமரனாகிய அவனென்க. அவன் அன்றியும் - அவன் உன்பால் உள்ளம் நீங்காதிருப்பதன்றியும் என விரித்துரைக்க. மணிமேகலை உதயகுமரனை இடைவிடாது நினைத்திருந்தாள் என்பது, அவன் வெட்டுண்டிறந்தபொழுது, 1 "உவவன மருங்கி னின்பா லுள்ளம் தவிர்விலேனாதலின்" என்று அவள் அவனைக் குறித்துக் கூறுவதனால் அறியப்படும். சாலி - சிறந்த நெல், கந்தசாலி - மணமுள்ள ஒருவகைச் சிறந்த நெல், அறத்திற்கு மூலமாகிய நீ உதயகுமரனை விரும்பின் நின்னியல்பு கந்தசாலியின் வித்துக் களர் நிலத்து விழ்ந்ததுபோன்று பயன்றறுப்போம் என்றபடி. மணிமேகலையின் உயர்வுபற்றிக் கந்தசாலியை உவமை கூறினார். போன்ம்: ஈற்றுமிசை யுகரங்கெட்டு மயக்க விதியின்மையின் லகரம் திரிந்து வந்தது.

50--6.இன்னும் கேளாய் இலக்குமி நீ-இலக்குமி நீ இன்னும் கேட்பாயாக, நின் தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும் - நின் முற் பிறந்தோர் தாரையும் வீரையும் ஆவர், ஆங்கவர் தம்மை - அவர்களை, அங்கநாட்டு அகவயின் - அங்கநாட்டினுள்ளதாகிய, கச்சயம் ஆளும் கழற்கால் வேந்தன் - கச்சய நகரத்தை ஆண்ட வீரக் கழலணிந்த காலையுடைய வேந்தனாகிய, துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்-துச்சயன் என்னும் பெயருடைய ஒருவன் மணந்தனன், அவருடன் ஆங்கவன் அகன்மலை ஆடி - அம் மன்னவன் அம் மகளிருடன் அகன்ற மலைப்பக்கங்களில் விளையாடி, கங்கைப்பேரியாற்று அடைகரை இருந்துழி - கங்கையாற்றின் அடைகரையில் இருந்தபொழுது ;

தவ்வை - தமக்கை ; 2 "செய்யவள், தவ்வையைக் காட்டிவிடும்" என்பது காண்க.


1 மணி. 21: 13-4.  2 குறள். 197.