பக்கம் எண் :

பக்கம் எண் :147

Manimegalai-Book Content
11. பாத்திரம் பெற்ற காதை

நோக்கி - மெல்ல நோக்கிக்கொண்டு, காவதம் திரிய - ஒரு காத தூரம் சுற்றிக்கொண்டிருக்க;

குன்றம், சோலை, பொய்கை என்பவற்றிற்கு இரண்டனுருபு விரிக்க. பூக்கள் விரிந்த சோலையுமாம். காதம் காவதம் என விரிந்து நின்றது; 1 வ, பகுதிப் பொருள் விகுதி யென்பர் அடியார்க்கு நல்லார்.

5--8. கடவுட் கோலத்துத் தீவதிலகை செவ்வனம் தோன்றி-தெய்வ வேடமுடைய தீவதிலகை என்பாள் செவ்விதாகத் தோன்றி, கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய - மரக்கலம் கவிழப்பெற்று அதினின்றும் உய்ந்துவந்த மகளிரைப்போல் ஈண்டுவந்து சேர்ந்த, இலங்குதொடி நல்லாய் யார் நீ என்றலும் - விளங்குகின்ற வளையல்களை யணிந்த மெல்லியலே நீ யார் என வினவுதலும் ;

தீவதிலகை : இந்திரன் ஏவலாற் புத்தன் பாத பீடிகையைப் பாது காத்துக்கொண்டு மணிபல்லவத்தில் இருப்பவள்; தீவுக்குத் திலகம் போன்றவள் என்றது பொருள். தனித்து ஓர் தீவில் வந்திருத்தலின் ''கலங்கவிழ் மகளிர் போல்'' என்றாள். செவ்வனம்-நேரே யென்றுமாம்

9--18. எப்பிறப் பகத்துள் யார் நீ என்றது-யார் நீ யென என்னை வினாவியது எனது எப்பிறப்பின் நிகழ்ச்சி குறித்து, பொற்கொடி அன்னாய் பொருந்திக் கேளாய் - காமவல்லி போல்வாய் யான் கூறுவதனை மனம் பொருந்திக் கேட்பாயாக, போய பிறவியில்- சென்ற பிறவியில், பூமியங் கிழவன் - நிலவுலகினையாண்ட மன்னனாகிய, இராகுலன் மனை யான்-இராகுலனுடைய மனைவியாவேன்யான், இலக்குமி என்பேர் - என்னுடைய பெயர் இலக்குமி என்பது, ஆய பிறவியில்-இப் பிறப்பிலே, ஆடலங்கணிகை மாதவி ஈன்ற மணிமேகலை யான் - நாடகக் கணிகையாகிய மாதவி பெற்ற மணிமேகலை யாவேன் நான், என் பெயர்த் தெய்வம் ஈங்கு எனைக் கொணர - மணிமேகலா தெய்வம் ஈண்டு என்னைக் கொண்டுவர, இம் மன்பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன்- பெருமை பொருந்திய இப் பெரும் பீடிகையால் என் முற்பிறப்பினை அறிந்தேன், ஈங்கு என் வரவு இது-ஈண்டு நான் வந்த வரலாறு இது, ஈங்கு எய்திய பயன் இது - இவ்விடத்தில் யான் அடைந்த பயன் இதுவாகும், பூங்கொடி அன்னாய் யார் நீ என்றலும் - பூங்கொடி போல்வாய் நீதான் யார் எனக் கேட்டலும்;

பூமியங் கிழவன் - தரணிபன். ஆய - இப்பொழுது உளதாகிய, பீடிகை-பீடிகையால்; மூன்றனுருபு தொக்கது. எய்திய-வந்தமையாலாகிய என்றுமாம். பயன் இது என்றது பழம்பிறப் புணர்ந்தமையை.

19--29.ஆயிழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த - மணிமேகலை தன் முற்பிறப்பினை அறிந்த தன்மையை உணர்ந்த, தீவதிலகை


1 சிலப். 10 : 36. உரை.