பக்கம் எண் :

பக்கம் எண் :176

Manimegalai-Book Content
13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
 
அணியிழை கேளாய் - ஆபுத்திரன் வரலாற்றை அணியிழாய் கேட்பாயாக, வாரணாசி ஓர் மறை ஓம்பாளன் - காசித் திருப்பதியின் கண்ணுள்ள ஓர் அந்தணனும், ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன் - மறைகளை ஓதுவிப்போனும் ஆகிய அபஞ்சிகன் என்போனது, பார்ப்பனி சாலி காப்புக் கடைகழிந்து - மனைவியாகிய சாலி என்பவள் காவலின் எல்லையைக் கடந்து, கொண்டோன் பிழைத்த தண்டம் அஞ்சி - கொழுநனுக்குப் பிழைபுரிந்தமையாலுண்டாம் தண்டத்திற்குப் பயந்து, தென்றிசைக் குமரி ஆடிய வருவோள் - தென் திசையிலுள்ள குமரியின்கண் நீராடும் பொருட்டு வருகின்றவள், சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை - அனைவரும் உறங்குவதற்குக் காரணமாகிய இருளில் வழியிடத்திலே சூல் முதிர்ந்த பருவத்தில், ஈன்ற குழவிக்கு இரங்காள் ஆகி - பெற்ற குழந்தைக்குச் சிறிதும் இரங்காதவளாய், தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்க - கட்புலனாகாத ஒரு தோட்டத்திலே இட்டுச் செல்ல ;

திறம்-வரலாறு. மறை ஓம்பாளன்-வேதத்தைப் பாதுகாப்பவன். உவாத்தி - உபாத் தியாயன் என்பதன் சிதைவு ; இஃது உவாத்தியன் ; உவாத்தியான் எனவும் வழங்கும். பார்ப்பனி - பார்ப்பான் மனைவி ; மறையோரிற் கணவனைப் பார்ப்பான் என்றும், மனைவியைப் பார்ப்பனியென்றும் கூறுவர். காப்பு-நிறைக்காவல். காப்புக் கடை கழிந்து - கற்பொழுக்கம் நீங்கி யென்றபடி. தண்டம் - மறுமையில் எய்தலாகும் தண்டனை. குமரி-குமரியாறு; கடலுமாம். 1 ''''தொடியோன் பௌவம்'''' என்பதன் உரை  காண்க. ஆடிய : செய்யிய வென்னும் வினையெச்சம். முதிர் பருவத்து - முதிர்ந்த பொழுதிலே. தோன்றா - மறைவிடத்துள்ள. துடவை - தோட்டம் ; 2 ''''தொய்யாது வித்திய துளர்படு துடவை''''  என்பது காண்க.

11--4.தாயில் தூவாக் குழவி துயர் கேட்டு - உண்ணாது பசித் துன்பத்தால் அழுகின்ற தாயற்ற குழந்தை ஒலியைக் கேட்டு, ஓர் ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர்தீர - ஒரு பசு ஆண்டு வந்து சேர்ந்து அக் குழவியின் பசித்துன்பம் நீங்க, நாவால் நக்கி நன்பால் ஊட்டி - நாவினால் நக்குதல் புரிந்து தனது இனிய பாலை உண்பித்து, போகாது எழுநாள் புறம்காத்து ஓம்ப-ஏழு நாள்வரை அக்குழவியை விட்டு நீங்காமல் பாதுகாக்க ;

     தூவாமை - உண்ணாமை, துயர்-துயரினால் அழுது கூப்பிடும் ஒலி : ஆகுபெயர், 3 '''' தாயில் தூவாக் குழவி போல, ஓவாது கூஉம்நின்னுடற்றியோர் நாடே'''' என்பது அறியற்பாலது. குழவித் துயரென்பதும் பாடம். புறங்காத்தல் - பாதுகாத்தல்; 4 ''''வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப'''' என்றார் தொல்காப்பியனாரும். புறங்காத்து ஓம்ப :


1 சிலப். 8 : 1. 2 மலைபடு. 122. 3 புறம். 4. 4 தொல். செய்.சூ. 110.