பக்கம் எண் :

பக்கம் எண் :192

Manimegalai-Book Content
14. பாத்திர மரபு கூறிய காதை
 

49--54 புரப்போன் பாத்திரம் பொழிந்தூண் சுரந்தீங்கு - உயிர்களைக் காப்பாற்றுகின்ற ஆபுத்திரனது பாத்திரத்தின்கட் பெய்யப்பட்ட உணவுபெருகி, இரப்போர்க் காணாது ஏமாந்து இருப்ப - அவ் வுணவினை யிடுதற்கு இரப்போரைக் காணாமல் அவன் ஏக்கற்றிருக்குமாறு, நிரப்பின் றெய்திய நீள் நிலம் அடங்கலும் - பெரிய நிலவுலக முழுதிலும் வறுமையின்றாகும் பொருட்டு, பரப்பு நீராற் பல்வளஞ் சுரக்கென - முகில்கள் கடன் முகந்து சொரியும் மழை நீரால் பல வளங்களும் பெருகுக என்று, ஆங்கவன் பொருட்டால் ஆயிரம் கண்ணோன் - ஆபுத்திரன் தன்னை இகழ்ந்தமை காரணமாக ஆயிரங் கண்களையுடைய இந்திரன், ஓங்குயர் பெருஞ் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும் - மிக வுயர்ந்த பெருவளங்களை உலகினர்க்கு அளித்தலும் ;

பொருந்தூண் என்பதும் பாடம். இன்று-இன்மை; இன்று நிரப்புற்ற என்னலுமாம். பரப்பு நீர் என்பதற்குக் கடல் எனவும், அதனை முகந்து பொழியும் நீரெனவும் பொருள் கொள்க. ஆயிரங் கண்ணோன் அவன் பொருட்டால் உலகோர்க்குச் சிறப்பளித்தலு மென்க. ஆபுத்திரன் தன்னை இகழ்ந்தனனெனச் சினந்து இந்திரன் அவனது பாத்திரம் பயனின்றாகுமாறு இங்ஙனம் செய்தானென்க.

55--64. பன்னீராண்டு பாண்டி நன்னாடு மன்னுயிர் மடிய மழை வளம் இழந்தது - மிக்க உயிர்கள் மடியுமாறு பன்னீராண்டு மழை வளம் இழந்திருந்ததாகிய பாண்டி நன்னாடு, வசித்தொழில் உதவ மாநிலம் கொழுப்ப - மழை பெய்தற் றொழிலைப் புரியப் பெரிய பூமிகள் எல்லாம் செழித்து விளையாநிற்க, பசிப்பு உயிர் அறியாப் பான்மைத்து ஆகலின் - உயிர்கள் பசி இன்னதென்று அறியாதவாறு சிறப்பெய்திய தன்மையால், ஆருயிர் ஓம்புநன் அம்பலப் பீடிகை - அரிய உயிர்களைக் காக்கும் ஆபுத்திரனது அம்பலப் பீடிகை, ஊண் ஒலி அரவம் ஒடுங்கியதாகி - உணவுண்ணுதலானுண்டாகும் ஆரவாரம் குறைந்ததாய், விடரும் தூர்த்தரும் விட்டேற் றாளரும் - காமுகரும் பரத்தரும் சுற்றத்தினீங்கித் திரிவோரும், நடவை மாக்களும் நகையொடு வைகி - வழிச் செல்லும் மக்களும் நகைப்புடன் தங்கி, வட்டும் சூதும் வம்பக் கோட்டியும் - உண்டையுருட்டுதலும் சூதாடுதலும் பயனில் சொற்களைக் கூறுதலுமுடையோர் கூட்டமும், முட்டா வாழ்க்கை முறை மையதாக-குறையாத வாழ்க்கை முறைமையை யுடையதாக ;

இழந்ததாகிய பாண்டி நன்னாடு பான்மைத்தாகலின் என்க. ஆபுத்திரன் பலநாளிருந்து அறஞ்செய்தற் கிடனாயினமையின் அம்பலம் அவனதாகக் கூறப்பட்டது. ஒலியரவம் :வினைத்தொகை. விட்டேற்றாளர் என்பதற்கு இகழ்ந்து கடுஞ்சொற் கூறுவோர் என்றுரைத்தலுமாம் ; 1"விடருந் தூர்த்தரும் விட்டே றுரைப்ப" என்றார் பிறரும்.


1 பெருங். 1. 35 : 226,