பக்கம் எண் :

பக்கம் எண் :202

Manimegalai-Book Content
15. பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை

காணப்பட்டன; 1"செயப்படு பொருளைச் செய்தது போலத்'' தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே" என்பதனாற் போந்த வழுவமைதி : சிறப்பு - வியத்தகு நிகழ்ச்சி ; நன்னிமித்தம். புத்தன் தோன்றுங்காலத்துளவாம் சிறப்பு நிகழ்ச்சிகள் முன்னர் அறவணர்த்தொழுத காதையிற் கூறப்பட்டமை காண்க. நெடுநிலையுடைக்கந்து என மாறுக. அந்தில் : அசை; அவ்விடம் என்று கொண்டு, அந்திற்சேறலும் என்றியைத்தலுமாம்.

36--9.மனிபல்லவத்திடை மன்னுயிர் நீத்தோன் - மணிபல்லவத்தின்கண் ஆருயிர் துறந்தோனாகிய ஆபுத்திரன், தணியா உயிர் உயச் சாவகத்து உதித்தனன் - குறையாத உயிர்கள் உய்யும்படி சாவக நாட்டில் தோன்றினன், ஆங்கவன் தன்திறம் அறவணன் அறியும் என்று - அவனது வரலாற்றினை அறவண முனிவன் அறிவான் என்று கூறி, ஈங்கு என் நாவை வருத்தியது இதுகேள்-எனது நாவை வருத்தியது இதனைக் கேட்பாயாக ;

தணியா - குறையாத, நிறைந்த ; துன்பம் தணியாத உயிரென்றும் துன்பந் தணிந்து உயிருய்ய வென்றும் உரைத்தலுமாம். பாவை என்று கூறி நாவை வருத்தியதென்க. பாவையின் கூற்றை யுட்கொண்ட மாதவர்கள் தம்பால்வந்து வினாவத் தாம் அவர்கட்கு உரைத்தமை தோன்ற என்நாவை வருத்திய தென்றார்; இதனால் அறவணவடிகள் தாபதப் பக்கத்து வாய்வாளாமையிற் கருத்துடையரென்பதும் தோன்றும். ஆங்கு, ஈங்கு என்பன அசைகள்.

40--5.மண்ணாள் வேந்தன் மண்முகன் என்னும் புண்ணிய முதல்வன் திருந்தடி வணங்கி-அந் நாட்டினையாளும் மன்னனாகிய பூமிசந்திரன் மண்முகன் எனப் பெயரிய தவமுதல்வனது செவ்விய திருவடியை வணக்கஞ் செய்து, மக்களை இல்லேன் - மக்கட்பேறு இல்லாதவனாகிய யான், மாதவன் அருளால் பெற்றேன் புதல்வனை என்று - நுமதருளினாலே அரிய புதல்வனை யடைந்தேன் என்று கூறி, அவன் வளர்ப்ப - அவன் வளர்த்துவர, அரைசு ஆள் செல்வம் அவன்பால் உண்மையின் - அரசாளுதலாகிய செல்வம் அவனிடம் உள்ளமையால், நிரைதார் வேந்தன் ஆயினன் அவன்தான். அந்த ஆபுத்திரன் மலர்கள் இணைந்த மாலையையுடைய
மன்னவனாயினன் ;

மாதவன் : முன்னிலையிற் படர்க்கை. அரைசு : இடைப்போலி. அவன் என்றது பூமிசந்திரனை ; அவன் மகனாகிய ஆபுத்திரன் என்று கொண்டு, அரசாளும் பொறியுண்மையால் என்றுரைத்தலுமாம்; ஆபுத்திரனுக்குப் புண்ணியராசன் என்னும் பெயருண்டென்பது பின்னர் அறியப்படும். நிரைதார்: வினைத்தொகை. இதுகாறும் ஆபுத்திரன் வரலாறு உரைக்கப்பட்டது.


1 தொல். வினை. 49.