பக்கம் எண் :

பக்கம் எண் :212

::TVU::
16. ஆதிரை பிச்சையிட்ட காதை


125





130





135
சந்திர தத்தன் என்னும் வாணிகன்
வங்கஞ் சேர்ந்ததில் வந்துடன் ஏறி

இந்நகர் புகுந்தீங் கிவளொடு வாழ்ந்து
தன்மனை நன்பல தானமும் செய்தனன்
ஆங்ஙனம் ஆகிய ஆதிரை கையால்
பூங்கொடி நல்லாய் பிச்சை பெறுகென
மனையகம் புகுந்து மணிமே கலைதான்

புனையா ஓவியம் போல நிற்றலும்
தொழுது வலங்கொண்டு துயாறு கிளவியோடு
அமுத சுரபியின் அகன்சுரை நிறைதரப்
பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென
ஆதிரை யிட்டனள் ஆருயிர் மருந்தென்.

உரை

1--2.   ஈங்கிவள் செய்திகேள் என விஞ்சையர் பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போள்-இப்பொழுது இவ்வாதிரையின் அருஞ் செயலைக் கேட்பாயாக என்று விஞ்சையர் மகளான காயசண்டிகை ஆதிரைக்கு நேர்ந்ததை மணிமேகலைக்கு உரைப்பவள்.
ஈங்கிவள்: ஒரு சொல்லுமாம். மாதர்க்கு உரைப்போளென்க.

2--10.   ஆதிரை கணவன் ஆயிழை கேளாய் சாதுவன் என்போன் தகவிலன் ஆகி-நங்காய் கேள் ஆதிரையின் கணவனாகிய சாதுவன் என்பவன் நன்னடக்கையிலனாய், அணியிழைதன்னை அகன்றனன் போகி - அழகிய அணிகலன்களையுடைய ஆதிரையை நீங்கிச் சென்று, கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க-பொதுமகளொருத்தி தீயொழுக்கத்தால் வந்தவுணவை அளிக்க அதனை உண்டு, வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கி - வட்டாடுதலினும் சூதாடுதலினும் மிகுந்த பொருளைக் கொடுத்து, கெட்ட பொருளின் கிளை கேடு உறுதலின் - கெடுக்கப்பட்ட பொருளின் பகுதியெல்லாம் அழிந்தமையின், பேணிய கணிகையும் பிறர் நலங்காட்டி-முன்னர்ப் பேணிய பரத்தையும் பொருளுள்ள பிறருடைய சிறப்பினைக் காட்டி, காணம் இலி எனக் கையுதிர்க்கோடலும்-பொன் இல்லாதவன் என்று கையை யசைத்துப் போக்குதலும்;

கைத்தூண் - தீயொழுக்கத்தால் வந்த உணவு ; கை - ஒழுக்கம் ; 1"கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை" என்பது காண்க. கையகத்தாகிய உணவென்றுமாம். நல்க உண்டு என ஒரு சொல் வருவித்துரைக்க. வட்டு - உண்டையுருட்டுதல்; 2"அரங்கின்றி வட்டாடியற்றே"


1 சிலப். 15 : 57.      2 குறள். 401.