அசரீரி - சரீரம் இல்லாதது
; அருவமாய் எங்கும் நிறைந்துள்ள கடவுள். இதனை அசரீரி வாக்கு எனவும்
ஆகாயவாணி எனவும் கூறுவர்.
45--51. ஐ அரி உண்கண் அழுதுயர்
நீங்கி - அழகிய செவ்வரி படர்ந்த மையுண்ட கண்களையுடைய ஆதிரைநல்லாள்
தான் அழுதுகொண்டிருந்த துன்பத்தினின்றும் நீங்கி, பொய்கை புக்கு
ஆடிப் போதுவாள் போன்று-வாவியுட் சென்று நீராடி வருவாள் போல,
மனம் கவல்வு இன்றி மனையகம் புகுந்து - மனம் கவலுதலின்றி இல்லுட்
சென்று, என் கண்மணி அனையான் கடிது ஈங்கு உறுகென-எனது கண்ணினுள்
மணியனைய கணவன் விரைவில் ஈண்டு வருக என்று, புண்ணியம் முட்டாள்-அறம்
புரிதல் வழுவா தவளாய், பொழிமழை தரூஉம் அரும்பெறல் மரபின் பத்தினிப்
பெண்டிரும்-பொழிகின்ற மழையைத் தரவல்ல பெறற்கரிய ஒழுக்கத்தினையுடைய
கற்பிற் சிறந்த மகளிரும், விரும்பினர் தொழூஉம் வியப்பினள்
ஆயினள் - வியந்து விரும்பி வணங்குந் தகுதியளாயினள் ;
முட்டுதல் - குன்றுதல்,
வழுவுதல். பெண்டிரும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பு. வியந்து விரும்பினர்
தொழுமெனப் பிரித்துக்கூட்டுக ; வியப்பு-மேன்மை யெனலுமாம்.
52--59. ஆங்கவள் கணவனும் அலைநீர்
அடைகரை ஓங்குயர் பிறங்கல் ஒரு மர நீழல்-அவளின் கணவனாகிய சாதுவன்
கடற்கரையில் மிக உயர்ந்த மலையின் கண்ணுள்ள ஒரு மர நிழலில்,
மஞ்சுடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து துஞ்சு துயில்கொள்ள -
முகில்களையுடைய பெரிய கடலின்கண் வருந்திய துன்ப மிகுந்து மிக்க
உறக்கத்தினையுடைய, அச் சூர்மலை வாழும் நக்க சாரணர் நயமிலர்
தோன்றி - அச்சத்தினைத்தரும் அம் மலையிலுறையும் வன்கணாளராகிய
நக்கசாரணர்கள் ஆண்டுவந்து, பக்கஞ்சேர்ந்து - சாதுவன் மருங்கடைந்து,
பரி புலம்பினன் இவன் - இவன் மிகவும் வருந்தியுள்ளான், தானே தமியன்
வந்தனன்-தான் ஒருவனேயாய் ஈண்டு வந்தனன், அளியன் - எளிமையுடையன்,
ஊனுடை இவ்வுடம்பு உணவு என்று எழுப்பலும் - புலால் பொதிந்த இவனுடம்பு
நமக்கு உணவாகும் என்று எழுப்புதலும் ;
அலைநீர் - கடல்.
துஞ்சு துயில்-மிக்க துயில். நக்க சாரணராகிய நாகர் என்க. நயமிலர்
- இனிமையில்லாதவர் ; வன்கண்மை யுடையர், பரிபுலம்பு - மிக்க
வருத்தம்; 1''பக்க
நீங்குமின் பரிபுலம் பினரென'', என்பது காண்க.